தக்காளி விலை கொடுத்த ஷாக்கே இன்னும் மறக்கல.. அதற்குள் வெங்காயமா? விலையை குறைக்க மத்திய அரசு முடிவு
சென்னை: செப்டம்பர் மாதம் வெங்காயம் விலை உயரக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக வெங்காயம் ஏற்றுமதிக்கான வரியை 40 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தக்காளி விலை ஏறத்தாழ இரண்டு மாதங்களாக விலை அதிகரித்து காணப்பட்டது. நாடு முழுவதும் தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. ஜுலை மாத துவக்கத்தில் கிலோ தக்காளி ரூ.250 க்கு மேல் விற்பனையாகி இல்லத்தரசிகளை அதிரவைத்தது. தக்காளி விலை உயர்வால் சில உணவகங்கள் தக்காளி பயன்பாட்டையே அடியோடு நிறுத்தின. தக்காளி சட்னியை காண முடியாத அளவுக்கு பல ஓட்டல்களிலும் நிலைமை மாறியது.

தக்காளி விலை தற்போதுதான் குறைந்து மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், மற்றொரு அத்தியாவசிய உணவு பொருளான வெங்காயத்தின் விலையையும் வரும் செப்டம்பர் மாதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. தக்காளி விலை இப்போதுதான் குறைந்தது என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் வெங்காயத்தின் விலை செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை தொடும் என வெளியான செய்தி இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைத்தது.
தற்போதே விலை உயரத்தொடங்கியிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் விலை கணிசமாக உயர்ந்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதம் வரி விதித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் அதிக அளவில் கிடைக்க ஏதுவாக 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்து.

மத்திய நிதி அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தற்போது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி 40 சதவீதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications