இந்தியா ஒரு சனாதன நாடு.. சனாதனம் ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.. ஆளுநர் ரவி பரபர பேச்சு!
சென்னை: "சனாதன தர்மத்தில் தீண்டாமை இல்லை, சனாதன தர்மம் இந்த உலகம் ஒரு குடும்பம் என கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்." என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், தொடர்ந்து ஆளுநர் சனாதன தர்மம் பற்றி பேசி வருகிறார்.
சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் இந்த நிகழ்வில் ஆளுநர் ரவி உரையாற்றினார்.

ஆளுநர் ரவி பேச்சு: அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு என்று நாம் இன்று சொல்லும் இந்த பகுதி புனிதமான ஒரு இடம். மனித நேயத்திற்காக ராகவேந்திரா வாழ்ந்தார். இங்கு பல ஆன்மிக சிந்தனையாளர்கள் உருவாகி உள்ளனர். சனாதன தர்மம் தொடங்கவும் பாரத் என்ற இந்த நாடு உருவாகவும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவிற்கு அறிமுகம் தேவைப்படுகிறது, ஆனால் பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை.
ஆங்கிலேயர்கள் பெயர் வைத்ததால் தான் இந்தியா என்ற பெயர் உருவானது. அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் INDIA that is BHARAT என கூறப்பட்டுள்ளது. சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்துகிறது, பாகுபாட்டை வலியுறுத்துகிறது என்று பலர் கூறுகின்றனர். சனாதன தர்மம் மனிதர்கள் இடையே தீண்டாமையை ஒருபோதும் வலியுறுத்தவில்லை.
சனாதன நாடு: இந்த நாடு 1947ஆம் ஆண்டு உருவானது என பலர் நினைக்கின்றனர், இது மிகவும் நகைச்சுவையான ஒன்று. இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்த கோஷ் தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் இந்த உலகம் ஒரு குடும்பம் என கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இந்த நாடு சனாதன தர்மத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்துள்ளது. பத்தாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் இந்த வாழ்க்கை முறை உள்ளது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு வாழ்க்கை முறை இல்லை. தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை.
இன்னும் 25 ஆண்டுகளில்: கடவுளை வழிபடுவது மட்டுமே மடங்களில் கல்வியாக கற்பிக்கப்படுகிறது என பலர் நினைக்கின்றனர். மடங்களில் கடவுளை வணங்குவது என்பது ஒரு வேளை மட்டுமே. கல்வி, மக்கள் சேவை, பொது சேவை என அனைத்தையும் இதுபோன்ற மடங்கள் கற்பித்து வந்தன. இதனை நாம் இழந்த பின்புதான் அனைத்தையும் அரசிடம் எதிர்பார்த்து வருகிறோம்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டில் பல சேதங்களை உருவாக்கி உள்ளனர். எனவே இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் பொருள் அளவில் மட்டும் இருக்கக்கூடாது. அறிவியல் ரீதியாகவும், பொருளாதார அளவிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி பேச்சை ஒட்டுமொத்த நாடுகளும் உற்றுநோக்கி வருகின்றன. உலகம் முழுவதும் பல பிரச்சனைகள் தற்போது எழுந்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இந்தியாவில் உள்ளது. அதற்கு இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மீகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். பாரத் என்றால் என்ன என புரிந்து கொண்டுள்ள நபர் பிரதமர் மோடி. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதான தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. இதனை ஏற்கவில்லை என கூறும் நபர்களும் ஏற்று இதில் பயணம் செய்வார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications