ஜன்தன் கணக்கிலோ.. உஜ்வாலாவிலோ இல்லை.. பசி இருக்கிறது.. பிரதமர் மோடிக்கு சாமானியனின் சில கேள்விகள்!
சென்னை: ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உதவி என்றால் மற்ற கோடிக்கணக்கான மக்கள் எங்கே போவார்கள் என்று பிரதமர் மோடிக்கு சாமானியர்களில் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று உலகின் வல்லரசு நாடுகளை தாக்கியது போல் இந்தியாவை தாக்கினால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்படும் என்பது மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கணிப்பாக உள்ளது.
எனவே தான் 21 நாட்கள் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டுமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வைத்து கொரோனாவின் தாக்கத்தில் இருந்து அவர்களை காக்க மத்திய அரசும் மாநிலசும் போராடி வருகின்றன. ஆனால் இதன் தாக்கம் சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது.

வறுமையின் கொடுமை
கொரோனாவின் தாக்கத்திற்கு பயந்து வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்கள் திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கையில் காசும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் எதையும் வாங்கி பயன்படுத்தவும் முடியாமல் வறுமையின் கொடூரத்தை பார்த்து வருகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட சாமானியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அந்த கேள்விகளை இப்போது பார்ப்போம்.

பிப்ரவரியில் விழிக்கவில்லை
"பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம்.. கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சீனாவில் முதல்முதலாக டிசம்பரில் பாதித்தது என்கிறார்கள். ஜனவரியில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டதாக வெளியானது. ஆனால் அப்போதெல்லாம் எதுவும் அரசு செய்யவில்லை. பிப்ரவரி மாதம் அரசு விழித்திருந்தால் கூட இவ்வளவு துயரம் எங்களுக்கு வந்திருக்காது அல்லவா.

4 மாதம் அளித்து உங்களுக்கு
அதிகபட்சம் மார்ச் மாதம் 1ம் தேதி அன்றாது சர்வதேச விமான பயணங்களுக்கு தடைவிதித்து இருந்தால் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டோம். அதாவது உங்கள் கைவசம் 4 மாதங்கள் இருந்தும் அப்போது நீங்கள் கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது 21 நாட்கள் ஊரடங்கை நாங்கள் அனுபவிக்க வேண்டியது வந்திருக்காது. உங்களுக்க இயற்கை 4 மாதம் அளித்திருந்தது. ஆனால் எங்களுக்கு நீங்கள் அளித்தது வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே.

நடந்து போன மக்கள்
சரி ஊரடங்கு அறிவித்து விட்டீர்கள். அடுத்த நாள் எங்களுக்கு உணவுக்கு வழி என்ன என்று நாங்கள் யோசித்து பரிதவித்த போது.. உணவு அளித்து அரசு உங்களை காக்கும் என்று அறிவித்திருக்க வேண்டும் அல்லவா.. திட்டமிடப்படாத திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பசியை தாங்க முடியாமல் கொத்துக்கொத்தாக டெல்லியில் இருந்து வடமாநிலங்களை நோக்கி நடந்தது தங்கள் காதுக்கு நிச்சயம் போயிருக்கும். அதன் பிறகாவது அவர்களை போன்ற அப்பாவி மக்களுக்கு நிவாரண தொகை அறிவித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் யாருக்குமே எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது தங்கள் கவனத்துக்கு வந்ததா என்பது தெரியவில்லை.

இலவச சிலிண்டர்
இன்னொரு பக்கம் ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் மாதம் 500 ரூபாய் மூன்று மாதம் செலுத்தப்படும் என்று தங்கள் அரசு சொல்லியது. அதேபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண்களுக்கு மூன்று மாதம் இலவசமாக சிலிண்டர் வழஙகப்படும் என்று அறிவித்தது. இதுதவிர மக்களுககு ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக தர மாநிலங்களுக்கு உத்தரவிட்டீர்கள். அத்துடன் அந்த மாநில அரசுகள் சார்பில் 1000 ரூபாய் தரப்பட்டது. ஆனால் இதெல்லாம் சாமானியர்களை ஒருவாரம் பசியில்லாமல் வைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா.

உதவித்தொகை போதாது
ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உதவி என்றால் மற்ற கோடிக்கணக்கான மக்கள் எங்கே போவார்கள். அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதித்து தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலையில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வீடுகளில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பால் வாங்குவதற்கு கூட அரசுகள் அளித்த உதவித்தொகை போதாது என்பதே உண்மை.

ஊரடங்கை நீட்டித்தால்
நேற்று வரை வந்த செய்திகளை பார்க்கும் போது, குறிப்பாக எங்கள் தமிழத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும் போது ஊரங்கு நீட்டிக்கப்படும் என்றே சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயம் எங்களால் தாங்க முடியாது. கொரோனாவை தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பசியையும் வறுமையை தடுப்பது அவசியம். எனவே குறைந்தபட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மத்திய அரசு 5000 ரூபாயாவது வழங்கினால் தான் வறுமையை மக்களால் சமாளிக்க முடியும். தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" இப்படிக்கு சாமானியர்களில் ஒருவன்












Click it and Unblock the Notifications