கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவை முந்திட்டோம் என மத்திய அரசு குஷி- ஸ்டாக் இல்லையே என திண்டாடும் தமிழகம்
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை முந்திவிட்டதாக மத்திய பா.ஜ.க. மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. ஆனால் அனுப்ப வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுக்காததால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியே நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 6 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் ஆர்வம்
கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் கிராமப்புறங்களில் விலகி உள்ளது. இதனால் நீண்டவரிசைகளில் நின்று ஆர்வமுடன் மக்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர்.

32 கோடி பேருக்கு தடுப்பூசி
இன்றைய காலை நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32,36,63,297 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரைவிட அதிகம் என்கிறது மத்திய அரசு. அமெரிக்காவில் மொத்தம் 32,33,27,328 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி மகிழ்ச்சி
இந்த தகவலை சமூக வலைதளங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி உள்ளிட்டோரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தடுப்பூசி முகாம்கள் மூடல்
அதேநேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. சென்னையில் வெறும் 5,000 டோஸ்கள் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.

தடுப்பூசி பற்றாக்குறை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு போதுமான கொரோனா தடுப்பூசிகளை அனுப்பவில்லை. இதனால் சென்னையில் மட்டும் 45 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications