இந்தியாவில் பரவும் கொரோனா.. காசியாபாத்திலும் கால் வைத்தது.. நோயாளிகள் எண்ணிக்கை 30ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த எண்ணிக்கை 29 என்ற நிலையில் இருந்தது. இன்று காசியாபாத் நகரில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால், எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய, கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.
அதே நேரம் இந்தியாவில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், அது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது வரை வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தந்தோரை மட்டுமே, விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தி அனுப்பினர். அப்படியிருந்தும் இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 28 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

பரிசோதனைகள்
இதையடுத்து, எந்த ஒரு நாடாக இருந்தாலும் பரவாயில்லை.. அனைத்து நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களும், விமான நிலையங்களில் சோதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் குர்கான் நகரை சேர்ந்த பேடிஎம் நிறுவன ஊழியர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று இரவு உறுதியானது. எனவே, இரவு நிலவரப்படி இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

காசியாபாத்
உத்தரபிரதேசத்தின், காசியாபாத் நகரை சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது, ரத்த பரிசோதனையில் தெரிய வந்துள்ளதால் இன்று, இந்த எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 15 பேருக்கு அந்த பாதிப்பு உள்ளது. அவர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்திய குடிமக்களில் 15 பேருக்கு தான் இந்த பாதிப்பு இருக்கிறது என்பது சற்று ஆறுதலான செய்திதான்.

அமைச்சகங்கள்
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பல்வேறு துறை அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து இந்த விஷயத்தில் பணியாற்றி வருவதாகவும், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பல துறைகளின் செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்
இந்தியாவைப் பொறுத்தளவில் மிக அதிகமாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில்தான். இத்தாலி சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்திருந்தபோதுதான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது இந்த எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆய்வகங்கள்
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இதுவரை 6,00000 விமான பயணிகளுக்கு பரிசோதனைகள் நடத்திய பிறகே நாட்டுக்குள் அனுமதித்துள்ளதாக, தெரிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். அவர் கூறுகையில், ரத்த பரிசோதனை செய்வதற்காக, கூடுதலாக ஆய்வுக் கூடங்களை அமைத்து வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே 15 ஆய்வகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாவது கட்டமாக 19 புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார். கொரோனா வைரஸ் பீதியால், டெல்லியில் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications