சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தவ்ஹித் ஜமாஅத் ஆதரவு - செயற்குழுவில் முடிவு!
சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், இந்திய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உருமாற்றம் அடைந்து வருகிறது. வைரல் செய்திகள், பரபரக்கும் பிரேக்கிங்குகள், பிளாஷ் செய்திகள் என்று தகதக மோடில் உள்ளன.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற, மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மக்கள் நீதி மய்யம்
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிவற்றை பற்றி பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டன.
மநீம சோகம்
இறுதியில், திமுக கூட்டணியை ஆதரிப்பது என்றும், இக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் களப்பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை முறையாக திமுக தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இறுதியில் தேர்வு
திமுக ஆதரவு என்பதைத் தாண்டி, தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் அறிக்கை தான் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக தொடங்கி, நாம் தமிழர் வரை அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். சிறுபான்மையினர் வளர்ச்சி குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வரும் நிலையில், இறுதியில் அவர்கள் தேர்வு செய்திருப்பது திமுகவைத் தான்.
முணுமுணுக்கும் தொண்டர்கள்
இந்நிலையில், இதுபோன்ற சிறு சிறு அமைப்பு அல்லது கட்சிகள் கூட நம்மை நம்ப யோசிக்கிறார்களே என்று கமல்ஹாசன் ரொம்பவே வருத்தப்படுகிறாராம். மாற்றத்தை நோக்கி எனும் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத நினைத்தாலும், திமுக, அதிமுகவை நோக்கியே சிறு கட்சிகள் நகர்கிறதே என்று முணுமுணுக்கின்றனர் மநீம தொண்டர்கள்.