நெருங்கும் லோக்சபா தேர்தல்! வேகமாக பரவும் போலி தகவல்கள்.. லிஸ்டில் இந்தியாதான் டாப்! ஷாக் ரிப்போர்ட்
சென்னை: உலக அளவில் அதிக போலி தகவல்கள் பரப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆய்வறிக்கை விவாதங்களை கிளப்பியுள்ளது.
போலியான தகவல்கள் ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றும் அளவுக்கு சக்தி கொண்டவை. அதெல்லாம் அப்போ சார், இப்போ யார் இப்படி செய்றாங்க? என்று பலரும் கேள்வியெழுப்பலாம். ஆனால், இந்த டிஜிட்டல் காலத்தில்தான் பொய்கள் அதிகமாக, வேகமாக பரப்பப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

2024ம் ஆண்டு என்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த ஆண்டில் உலகின் ஏறத்தாழ பாதி நாடுகளில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் போலியான தகவல்கள் அதிகம் பரப்பப்படுகிறது. இதனை Statista புள்ளியியல் இதழ் அலசி ஆய்வு செய்து, எந்தெந்த நாடுகளில் அதிகமாக தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுகிறது என்கிற பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் கூட, கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிக அளவு பொய் செய்திகள் உலா வந்திருக்கின்றன. அதன் பின்னர் கொரோனா தொற்று காலத்தில் இதேபோன்று செய்திகள் உலா வந்திருக்கின்றன. டிஜிட்டல் தளத்தில் உலா வரும் இப்படியான செய்திகள் நிஜ உலகில் வன்முறைகளாக வெடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்தியா தவிர எல் சால்வடார், சவுதி அரேபியா, பாக்கிஸ்தான், ருமேனியா, அயர்லாந்து, செக்கியா, அமெரிக்கா, சியரா லியோன், பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் போலி செய்திகளால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் என Statista இதழ் கூறியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் கல்வித்துறை, வணிகம், அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் சிவில் சமூகம் முழுவதும் உள்ள 1,490 நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி அக்டோபர் மதம் 9ம் தேதி வரை சேகரிக்கப்பட்டுள்ளது.
போலி தகவல்களை விளக்கி அவ்வப்போது உண்மை செய்திகள் பதிவிடப்பட்டாலும், அது போலி செய்திகள் பரவுவதை போல வேகமாக பரவுவது கிடையது. எனவே அரசு தரப்பில் போலியான செய்திகள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications