அம்பன் புயலை அசத்தலாக கையாண்ட IMD.. கில்லி மாதிரி துல்லியமாக சொல்லியடித்தது
சென்னை: அம்பன் புயல் வீசக்கூடிய வேகம், கரையை கடக்க கூடிய இடம் ஆகியவற்றை மிகத்துல்லியமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துச் சொல்லியதன் காரணமாக உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
தொடர்ச்சியாக பல புயல் காலகட்டங்களில் சத்தமே இல்லாமல் இந்த சாதனையை இந்திய வானிலை ஆய்வு மையம் செய்து வருகிறது என்றபோதிலும், இந்த முறையும் துல்லியத்தன்மை மிக சிறப்பாக இருந்ததை மறுக்க முடியாது.
நேற்று மாலை மேற்குவங்கத்தில் சுந்தரவனக்காடு பகுதியில் கரையை கடந்தது அம்பன் புயல். மே 13ஆம் தேதி முதலே இதை சரியாக கணித்துச் சொன்னது இந்திய வானிலை ஆய்வு மையம்.
Exclusive: பஞ்சாயத்து ராஜ் சட்டத்தால்... எளியோர் கைகளிலும் அதிகாரம் கிடைக்கச்செய்தவர் ராஜீவ் -நக்மா
காற்றின் வேகம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த இந்த புயல் எப்போது புயலாக மாறும்? எந்த வேகத்தில் காற்று வீசும், என்பதையும் முன்கூட்டியே கணித்து கூறியிருந்தது அது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒடிசா கடற்கரையில் புயல் காற்றின் வேகம் என்பது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கணித்து இருந்தோம். இந்த கணிப்பு மே 13ஆம் தேதி வெளியிடப்பட்டு ஒடிசா அரசு எச்சரிக்கப்பட்டது.
ஒடிசா கடற்கரை
நேற்று ஒடிசா கடற்கரையான பாரதீப் பகுதியில் அதிக பட்சமாக 106 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது பதிவாகியுள்ளது. காற்று வீசும் வேகத்தை கூட இவ்வளவு துல்லியமாக கணித்து உள்ளோம் என்றார் பெருமிதத்துடன். காற்றின் வேகம் சரியாக கணிக்கப்பட்டதால்தான், ஒடிசா மாநில அரசு சில நாட்களுக்கு முன்பே, கடலோர மாவட்டங்களில் வசித்த மக்களில் பெரும்பாலானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தது.
புயல் கரையை கடந்தது
சுமார் 10 லட்சம் மக்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சுந்தரவனக் காடுகளில்தான் புயல் கரையை கடக்கும் என்று முன்பே, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கு ஏற்ப மேற்கு வங்க அரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருந்தது. சொல்லி வைத்தது போல, அதே இடத்தில்தான் நேற்று கரையை கடந்தது புயல்.
உயிரை காப்பாற்ற உதவி செய்த கணிப்பு
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் மிகத் துல்லியமாக கணித்து மக்களின் உயிரை பெருமளவுக்கு காப்பாற்ற உதவியது. இதில், இந்திய செயற்கைக்கோள்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்தியா சமீபத்தில் அனுப்பிய செயற்கைக்கோள்கள் பலவும் வானிலை ஆய்வு தொடர்பானது. அது மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவியுள்ளது என்று சொல்லலாம்.
பாதிப்பு குறைவு
2019ஆம் ஆண்டு ஃபானி புயல், 2014 ஆம் ஆண்டு ஹூட்ஹூட் புயல், 2013ம் ஆண்டு பாய்லின் புயல், 2018 ஆம் ஆண்டு டிட்லி புயல் போன்றவற்றின் போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து இருந்தது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி மேற்கு வங்க மாநிலத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். முந்தைய காலகட்டங்களில் இதுபோன்ற சூப்பர் புயல் கரையை கடக்கும்போது, இறப்பு என்பது நூற்றுக்கு மேற்பட்டதாக இருக்கும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் இந்த இறப்பு எண்ணிக்கை கூட, மாநில அரசு உரிய முன்னெச்சரிக்கை எடுக்காததால் இருந்திருக்குமே தவிர, வானிலை ஆய்வு மையம் சரியான நேரத்தில் தகவலை துல்லியமாக கொடுத்துவிட்டது என்பதை அவர்கள் அடிக்கோடிட்டு காட்டுகிறார்கள்.