Vande Bharat: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. தாமதம் ஆவதற்கு காரணம் இதுதானா? கண்டறியப்பட்ட மேஜர் குறைபாடுகள்
சென்னை: வந்தே பாரத் (Vande Bharat) ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்த காரணத்தால், அடுத்ததாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்தது. 16 பெட்டிகள் கொண்ட ஏசி ரயிலாக கடந்த ஆண்டே தயார் செய்யப்பட்ட நிலையில் இன்னமும் பயன்பாட்டுக்கு வராதது பயணிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் தாமதத்திற்கான காரணத்தினை ரயில்வே வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் தனி மவுசு உள்ளது. கட்டணம் கொஞ்சம் அதிகமாக உள்ளது என்ற ஆதங்கம் இருந்தாலும் வந்தே பாரத் ரயிலின் வேகம், சொகுசு வசதிகள் ஆகியவற்றால் அந்த ரயில்களை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் இருக்கை வசதி கொண்டதாகும். அதேபோல், பகல் நேர சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தொலை தூரங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களை போல வந்தே பாரத் ரயில் சேவையும் நீண்ட தூரத்திற்கு இயக்க வேண்டும், ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த பெட்டிகளை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆய்வு செய்திருந்தார்.
எப்போது தான் பயன்பாட்டுக்கு வரும்?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு இந்த ரயில்கள் கொண்டு வரப்பட்டன. 16 AC பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள், ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டமும் முடிந்த நிலையில், ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இந்த ரயில்கள் கடந்த செப்டம்பர் மாதமே அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்ட நாட்களை கடந்தும் இந்த ரயில்கள் இயக்குவதற்கு தாமதமாகிக்கொண்டே வருவது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சரியாக வடிவமைக்கப்படவில்லை
இந்த சூழலில் வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கு தாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வடிவமைப்பு மற்றும் சப்ளை செயினில் முக்கியமான மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல், படுக்கை அமைப்புகளில் உள்ள முனைகள் கூர்மையாக இருப்பதால் பயணிகள் தெரியாமல் இடித்துக்கொண்டால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே பாதுகாப்பு வாரியம் சுட்டிக்காட்டியுள்ளதாம். ஜன்னல் திரைச் சீலைகளைப் பிடிப்பதற்கான கைப்பிடிகள் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை.
சரி செய்த பிறகு சேவை தொடங்கப்படும்
படுக்கை இணைப்புகளுக்கு இடையே உள்ள சில இடைவெளிகள் காரணமாக, அந்த பகுதிகளைச் சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் சிக்கல்கள் எழும் போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இயக்குநர் ஜெனரல், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) மற்றும் அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது. ரயில்வே வாரியம் சுட்டிக்காட்டியிருக்கக்கூடிய இந்த சிறிய பிரச்சினைகளை சரி செய்த பிறகே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை இயக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications