ரயில் நிலையங்களில் தரமான உணவு! புதிய விதிகளை வெளியிட்டது ரயில்வே!
சென்னை: ரயில் நிலையங்களில் கேஎஃப்சி, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபல உணவகங்கள் அமைக்க ரயில்வே துறை புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஆன்லைனில் ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அது போல் தரமான உணவை அனைத்து தரப்பினரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த ஆன்லைன் ஏல முறை கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து தமிழக ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரயில் நிலையங்களில் கே.எஃப்.சி., மெக்டொனால்ட்ஸ்: பிரபல உணவகங்கள் வர ரயில்வே புதிய விதிகள் வெளியீடு!
ரயில் பயணிகளுக்கு உயர்தரமான உணவுத் தேர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய ரயில்வே வாரியம் முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் கே.எஃப்.சி., மெக்டொனால்ட்ஸ், பிகானேர்வாலா போன்ற பிரபல தேசிய மற்றும் பன்னாட்டு உணவு நிறுவனங்களின் உணவகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்.
திட்டத்தின் பின்னணி
தற்போது நாடு முழுவதும் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுமார் 2.3 கோடிப் பயணிகள் பயணிக்கும் நிலையில், தரமான உணவகங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
நான்காவது வகை கடை: இதுவரை டீ, சிற்றுண்டி மற்றும் ஜூஸ் போன்ற மூன்று சிறிய வகை கடைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. தற்போது 'பெரிய நிறுவன உணவகங்கள்' என்ற நான்காவது வகை சேர்க்கப்பட்டுள்ளது.
ஏல முறை: இந்தக் கடைகளுக்கான இட ஒதுக்கீடு ஆன்லைன் ஏலம் மூலமே நடைபெறும். அதிக ஏலத்தொகை செலுத்தும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்குச் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
சமூக நீதி: தற்போதைய சமூக ஒதுக்கீட்டின் கீழ் செயல்படும் கடைகள் (பழங்குடியினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்றோருக்கான ஒதுக்கீடு) பாதிக்கப்படாது என்றும், புதிய கடைகள் அவர்களுக்குப் போட்டியாக அமையாது என்றும் ரயில்வே வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது பயணிகளுக்குச் சுத்தமான சூழலையும், பலதரப்பட்ட உணவு வகைகளையும் அளிக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications