இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா.. முதல்வர் ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் நேரில் அழைப்பு!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவளவிழா நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சென்னை தலைமைச் செயலகத்தில் (20-08-2022) சனிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மைத் துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் சந்தித்தனர்.
கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்களின் தேசிய அளவிலான சமய நல்லிணக்கப் பயணமாக 'தேசநேச திருப்பயணம்' மேற்கொண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் பயணம் முடித்து தமிழ்நாட்டுப் பயணத்தை தொடக்கமாக வருகிற செப்டம்பர் 2-ந் தேதி சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் தளபதி மு.கஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே நாளில் தென்மாநில முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, தனது சார்பில், 2 தமிழக அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லிம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அன்புடன் ஏற்று முதலமைச்சர் இசைவு தந்துள்ளார்.
மேலும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எல்லா தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட முதல்வர், எல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.