குழப்பத்தில் பயணிகள்.. 8வது நாளாக ரத்தாகும் விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் நிலைமை என்ன!
சென்னை: சென்னையில் விமானச் சேவை 8வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் 8வது நாளாக 41 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களுக்குக் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக இண்டிகோ பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மிக முக்கியமான விமான நிறுவனமாக இருப்பது இண்டிகோ.. நாட்டின் பிரதான நகரங்கள், இரண்டாம் மற்றும் 3ம் கட்ட நகரங்கள் என எல்லா இடங்களுக்கும் விரிவான சேவையை இண்டிகோ நிறுவனம் கொடுத்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இண்டிகோ விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே சென்னை உட்பட பல இடங்களில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் 8வது நாளாக இன்றும் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் சென்னையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சிங்கப்பூர், பினாங்கு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்பட 18க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பாட்னா, கொச்சி, பெங்களூர் நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் 23 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களுக்கும் கூட குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் விமானங்கள் ரத்து செய்யப்படுவது மெல்லக் குறைந்தே வருகிறது. இண்டிகோ விமானச் சேவை சீராகி வருவதையே இது காட்டுகிறது. 5 நாட்களில் விமான ரத்து கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. நிலைமை சீராக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை முழுமையாகச் சீராகும் என்றும் விமான ரத்து இல்லாத சூழல் உருவாகும் என்றும் இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications