லடாக் எல்லையில் தொடரும் பதற்றம்.. 14வது கட்ட இந்திய-சீன ராணுவப் பேச்சுவார்த்தை தொடங்கியது!
சென்னை: கிழக்கு லடாக்கில் தொடரும் பதற்றத்தைத் தடுக்க இந்தியா சீனா ராணுவம் பேச்சுவார்த்தையை இன்று மீண்டும் தொடங்கியிருக்கிறது.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் பலப்படுத்தின. இந்த பதற்றத்தைத் தடுக்க இரு நாடுகளும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய-சீன எல்லை பிரச்னையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 20 மாதங்களாக நிலவிவரும் சீன ராணுவத்தின் அடக்குமுறைக்கு, தொடர்ந்து இந்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வெள்ளை மாளிகை.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த 2020-ம் ஆண்டு மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தின் தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

பதற்றம்
இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கிழக்கு லடாக்கில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் பதற்றம் தொடர்ந்தது. இதையடுத்து இரண்டு நாடுகளும் தங்களுடைய படைகளை திரும்பப்பெற்றன.

பாங்காங் ஏரி
இந்திய சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த நிலையில், சீனா கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான ஆதாரமாக செயற்கைகோள் படமும் வெளியானது.

பேச்சுவார்த்தை
கிட்டத்தட்ட இருபது மாதங்களாக நீடித்துவரும் ராணுவ பதற்றத்தைத் தவிர்க்க உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லைப் புள்ளியில் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான 14வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என இருநாட்டு ராணுவமும் அறிவித்தது. அதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.

ராணுவ தளபதிகள்
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா தலைமை தாங்குகிறார். சீனக் குழுவுக்கு தெற்கு சின்ஜியாங் ராணுவ மாவட்டத் தலைவர் மேஜர் ஜெனரல் யாங் லின் தலைமை தாங்குவார்.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
இதற்கு முன் நடந்த 13வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, இந்த 14வது பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டு ராணுவமும் முன்னெடுத்திருக்கின்றன. இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்து, இரு நாட்டுக்கும் நடுநிலையான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியில் பாலம் கட்டியது முதல், கடந்த வாரம், அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டது குறித்தும் இந்தியா இந்த கூட்டத்தில் பேசவிருப்பதாக தெரியவந்துள்ளது. கிழக்கு லடாக்கில் 2020 முதல் வடக்கேயும் தெற்கேயும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை நிறுத்திவைத்துள்ளனர். இந்த பதற்றத்தைத் தவிர்க்கவே இந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications