இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!
சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் இதன் பாதிப்பு எதிரொலித்திருக்கிறது. இன்று சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.46 உயர்த்தப்பட்டு ரூ.3283க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே வணிக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயரத்தப்பட்டிருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மத்திய கிழக்கின் தாக்கம்
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் 20% நடைபெறும் ஹார்முஸ் நீரிணை இன்னும் முழுமையாக திறக்கப்படாததால், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. அதேபோல எல்பிஜி சிலிண்டர் விலையும் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இன்னும் ஈரான்-அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. டிரம்ப் தரப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. எனவேதான் சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி தொடர்கிறது. இது இந்தியாவையும் கடுமையாக பாதித்திருக்கிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை உயர்வால், ஓட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், மக்கள் ஓட்டல் உணவுகளை வாங்குவதை தவிர்க்க தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஓட்டல் தொழில் நலிவடைய தொடங்கியிருக்கிறது.
நிலைமையை சமாளிக்க பல ஓட்டல்களும் விறகு அடுப்புகளுக்கு மாறியிருக்கின்றன. இருப்பினும் விறகு விலை அதிகமாக இருப்பதால், ஓட்டல்களால் அதை சமாளிக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications