ஓபிஎஸ் தரப்பு தலைமைக் கழகம் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.. பாதுகாப்பு வேண்டும்.. ஜெயக்குமார் புகார்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
சென்னை: ஓபிஎஸ் தரப்பு தலைமைக்கழகம் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நடந்த சம்பவம் போல் நடந்து விடக்கூடாது என பாதுகாப்பு கேட்டுள்ளோம். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதால் சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.
எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதேபோல், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட 37 பேர் விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயக்குமார் பேட்டி
இதனிடையே, ஓபிஎஸ் தரப்பிலும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இருப்பதாகாவும் இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தர இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால், அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையரை சந்தித்து இன்று மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே நடந்த சம்பவம் போல்
ஓபிஎஸ் தரப்பு தலைமைக்கழகம் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நடந்த சம்பவம் போல் நடந்து விடக்கூடாது என பாதுகாப்பு கேட்டுள்ளோம். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதால் சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்கள்.

நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது
எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடினார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் வரக்கூடாது. எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. ஏற்கனவே ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. எனவே மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்று விடக்கூடது என்பதற்காக பாதுகாப்பு கோரியுள்ளோம்.

எந்த வித தொடர்பும் இல்லை
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறையின் பொறுப்பு. அந்த நடவடிக்கையில் நாங்கள் காவல் ஆணையரிடம் எங்கள் குறைகளை தெரிவித்து இருக்கிறோம். அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே நீங்கள் சொல்வது அனுமானத்தில் நடந்தால் கூட காவல்துறை அவர்களை அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

நிச்சயம் ஏற்க மாட்டார்கள்
மேலும் அவர் கூறுகையில், "ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீம் என்று நான் பல முறை சொன்னது தற்போது நிருபணமாகி இருக்கிறது. துக்கம் விசாரிப்பது தமிழர்களின் பண்பாடு. ஆனால் முதல்வர் முக ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் ஆகிய எல்லோரும் ஆனந்தமாக சிரித்துக்கொண்டு இருந்தார்கள். எனவே துக்கம் விசாரித்தார்களா? அரசியல் பேசினார்களா?.. இதை அதிமுக தொண்டர்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications