சங்கரய்யாவுக்கு தராத டாக்டர் பட்டத்தை வேறு யாருக்கு தான் ஆளுநர் தருவார்? -கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்
சென்னை: சங்கரய்யாவுக்கு தராத டாக்டர் பட்டத்தை வேறு யாருக்கு தான் ஆளுநர் தருவார்? என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் வினவியுள்ளார். இது பற்றி அவர் விடுத்துள்ள நீண்ட பதிவு வருமாறு;
சிவப்பெனும் கம்பீரம்: சிவப்பெனும் கம்பீரம் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர்(D.Litt) பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.

வாழும் வரலாறு: ஆனால் அதற்கு ஆளுநர் அனுமதி மறுத்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முடிவு செய்துள்ள இந்த சங்கரய்யா யார்? செங்கொடி சிகப்பின் கம்பீர சீற்றத்தோடு 102 வது வயதில் நுழைந்திருக்கும் தோழர்.சங்கரய்யா, 1961ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக காரணமாக இருந்த தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் 32 பேரில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் ஒருவர்.
கம்யூனிஸ்ட் கொள்கை: தமது வாழ்நாளில் 80 ஆண்டுகளை கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்காகவும், ஏற்றத்தாழ்வுகளற்ற பொதுவுடமை சமூகத்தை உருவாக்கும் மகத்தான இலட்சிய பணிக்காகவும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்ட காலங்களிலும், விடுதலைக்கு பிறகான இந்தியாவில் பெரு முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ கொடூரங்களை வீழ்த்தவும் இந்த வயதில், இன்று வரை போராடிக் கொண்டிருப்பவர் தான் தோழர் சங்கரய்யா.
ஆலய நுழைவு போராட்டம்: 1938 ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது,அப்போதைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து ராஜாஜிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி அதனால் கைது செய்யப்பட்டவர் தான் தோழர் சங்கரய்யா. இதே ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தியநாத ஐயர், முத்துராமலிங்கத் தேவர் ஐயா தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்ற போது அந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ,தோழர். சங்கரய்யா மாணவர்களை திரட்டி கொண்டு வந்தார் என்பது வரலாற்று செய்தி.
படிப்பை தூக்கி எறிந்து: இதனையடுத்து வெள்ளையர்களையும், வெள்ளையர்களுக்கு சாதகமான இந்தியர்களையும் எதிர்த்த போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சங்கரய்யா, பட்டப்படிப்பா? ஏகாதிபத்திய எதிர்ப்பா ?என்றபோது, தேச விடுதலையே முக்கியமானது என தனது படிப்பை தூக்கி எறிந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்தார்.
சதி வழக்குகள்: தனது 80 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், சுதந்திரத்திற்காக போராடிய போது புனையப்பட்ட சதி வழக்குகள், இந்திய- சீன எல்லை பிரச்சனையின்போது கம்யூனிஸ்ட்களின் மீது இந்திய அரசாங்கத்தால் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு என 8 ஆண்டுகளுக்கு மேல் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் தான் தோழர் என்.சங்கரய்யா. இந்த சமூகத்தின் விடியலுக்காக 3 ஆண்டுகளுக்கு மேல், காடுகளிலும், மலைகளிலும், குடிசைகளிலும்,மழையில் நனைந்தப்படியும், வெயிலில் வாடியப்படியும் , குடிசைகளின் பழந்துணிகளை போர்த்திக் கொண்டும் தலைமறைவாக இருந்து பணியாற்றியவர் தான் தோழர் சங்கரய்யா.
19 நாள் உண்ணாவிரதம்: சிறைப்பட்டிருந்த காலங்களிலும் கூட தோழர் சங்கரய்யா அங்கிருந்தவர்களின் உரிமைகளுக்காக போராடினார் என்பதற்கு உதாரணங்கள் பலவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆம்!தோழர் சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் சிறை கைதிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து 19 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் என்கின்ற தகவல், என்.சங்கரய்யா: வாழ்க்கையும்- இயக்கமும் என்கின்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள்: சுதந்திரப் போராட்ட காலங்களில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதுடன், கிராமப்புறங்களில் இந்திய நில பண்ணையாளர்களால் சுரண்டப்பட்ட தமிழக விவசாயிகள், விவசாய தொழிலாளிகள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட கிராம உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக வீரம் செறிந்த போராட்டங்களை முன்னின்று நடத்திய அடையாளத்திற்கு சொந்தக்காரர் தான் தோழர் சங்கரய்யா. தமிழக சட்டமன்ற மன்றத்தில் 1967, 1977,மற்றும் 1980 ஆகிய காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றி தமிழக மக்களின் யதார்த்த நிலையை சட்டமன்றத்தில் எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர்கள் தான் தோழர் சங்கரய்யா.
ரேஷன் கடைகள்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம்(ரேஷன் கடைகள்) உருவாக குரல் கொடுத்தவர் தோழர் சக்கரய்யா தான். ஏராளமான சாதி மறுப்பு மற்றும் சீர்த்திருத்த திருமணங்களை தமிழகத்தில் நடத்தி வைத்தவர் தோழர் சங்கரய்யா. தான் மட்டுமல்ல தமது வாரிசுகளுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்து மத, இன, மொழி நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்பவர் தான் தோழர் சங்கரய்யா.
சாதி மறுப்பு திருமணம்: சற்றேற குறைய முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்து கொண்டு இந்த சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்கான உதாரண புருஷராக அடையாளப்பட்டிருப்பவர் தான் சங்கரய்யா. ஆடம்பரமும்,பதவி மோகமும்,கையூட்டும், களவாணித்தனமும் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், அப்பழுக்கற்ற, பொது வாழ்க்கைக்கும் மக்கள் சேவைக்கும் உதாரணமாகத் திகழும் தியாகத் தலைவரான தகைசால் தமிழர் தோழர்.என். சங்கரய்யாவிற்கு தான், கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.
இத்தனை தகுதி வாய்ந்த தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார் என்றால், பிறகு யாருக்கு தான் அந்த டாக்டர் பட்டத்தை கொடுக்க, அனுமதி அளிக்கப் போகிறார் ஆளுநர்?












Click it and Unblock the Notifications