குப்பைமேனி பூத்து கொண்டைக்கு ஆகாது! அது போல் தான் அதிமுகவின் முஸ்லீம் பாசம்! -இனிகோ இருதயராஜ்
சென்னை: "குப்பைமேனி பூத்து கொண்டைக்கு ஆகாது" என்பார்கள், அது போல தான் இஸ்லாமியர்கள் மீதான அதிமுகவின் பாசம் என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்கள் மீது பாசத்தை பிழிந்து பிழிந்து ஊற்றினாலும், எடப்பாடி பழனிச்சாமியை துளியளவும் இஸ்லாமிய மக்கள் நம்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அதிமுகவின் முஸ்லீம் பாசம் பற்றி இனிகோ கூறியிருப்பதாவது;

அதிமுகவின் முஸ்லீம் பாசம்: "குப்பைமேனி பூத்து கொண்டைக்கு ஆகாது" என்பார்கள். அதுபோல என்ன தான் இஸ்லாமியர்கள் மீது பாசத்தை பிழிந்து பிழிந்து ஊற்றினாலும் , எடப்பாடி பழனிச்சாமியை துளியளவும் இஸ்லாமிய மக்கள் நம்பப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் தொப்பி தந்திரங்கள் இஸ்லாமியர்களுக்கு நிச்சயம் தெரியும். அதுவும் குறிப்பாக அதிமுகவின் தொப்பித் தந்திரங்களை இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
மறக்கவில்லை: ''அந்த வகையில் தங்கள் சமூகம் மீதான அதிமுகவின் வஞ்சனையை, குரூரத்தை அந்த மக்கள் மறவாமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதி, மதவாத பாஜக ரவுடிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதாவை முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என முழங்கிய ஜெயலலிதாவை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
பாபர் மசூதி: ''பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்ட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிச்சாமியையும் முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. சிறுபான்மை மக்களுக்கு எதிரான, தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்களவையில் அதிமுக முழங்கியதை முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
பின்லேடன் படம்: ''தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்த போது, அதை ஏற்காத எடப்பாடி பழனிச்சாமியை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பின்லேடன் படத்தை கொண்டு வந்தார்கள் என்று இஸ்லாமிய மக்களை குற்றம் சாட்டிய அதிமுகவை முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது கொடூரமாக தாக்கி வழக்குகளை பதிவிட உத்தரவிட்ட எடப்பாடி பழனிச்சாமியை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள்: ''கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள் தான் என பொய் பேசிய எடப்பாடி அரசாங்கத்து ஆட்சியாளர்களை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
வலி தீராது: ''இஸ்லாமிய மாணவர்கள் படித்து முன்னேற அரசாங்கம் வழங்கிய கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திய போது, வாய் திறக்காத எடப்பாடியை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.இப்படி இஸ்லாமிய மக்களின் நினைவுகளில் அதிமுகவும், எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்படுத்திய வலி எத்தனை காலமானாலும் தீராது. 2024 ஆம் ஆண்டு அந்த காயம், எடப்பாடி பழனிச்சாமியை பழிவாங்காமல் ஆறாது.''












Click it and Unblock the Notifications