கண்டங்கள் கடந்தும் விஜயகாந்த் புகழ்! சொக்கத்தங்கம் பட பாடலை பாடி டான்சானியா இளைஞர் கிலி பால் அஞ்சலி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 9 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் மத்தியில் அவரது மறைவால் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என்பது பல்வேறு நிகழ்வுகள் மூலம் நிரூபணமாகி வருகிறது.
அந்த வகையில் டான்சானியா நாட்டை சேர்ந்த பிரபல சமூகவலைதள செயற்பாட்டாளும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென உலகம் முழுவதும் 5.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ளவருமான கிலி பால் (Kili Paul) விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற ''என்ன நினைச்ச.. நீ என்ன நினைச்ச..'' என்ற பாடலை பாடி அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிலி பால் (Kili Paul) பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவை மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பார்த்திருப்பதோடு 8 லட்சம் பேர் லைக் கொடுத்திருக்கிறார்கள். ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த டான்சானியா நாட்டு இளைஞருக்கு விஜயகாந்த் மரணம் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இதனிடையே கிலி பால் (Kili Paul) என்ற அந்த இளைஞருக்கு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட தமிழர் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது அவருக்கு கிடைத்த பெயரைக் காட்டிலும் மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்வதன் மூலம் கிடைத்துள்ள பெயர் அவரது குடும்பத்தினரை நெகிழச் செய்துள்ளது. குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் வசிக்கும் சில இடங்களில் கடைகளை அடைத்து துக்கம் அனுசரித்தது கவனிக்கத்தக்கது.
இதனை எல்லாம் பார்க்கும் போது ''இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்'' என்ற கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications