வல்லவன் காதல்..வயதை காரணம் காட்டிய கல்லூரி மாணவி! கத்தியால் கதை முடிக்க திட்டம்.. சில்லிட்ட சேலம்.!
சேலம்: சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கல்லூரி மாணவியிடம் காதலை தெரிவித்த இளைஞர் அவர் அதனை ஏற்றுக் கொள்ளாததால் கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வயது வித்தியாசம் காரணமாக காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை அந்த இளைஞர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் இளைஞர்கள் எப்போதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக ஆண்கள் பெண்கள் என பலரும் இன்ஸ்டாகிராமில் உலாவி வருகின்றனர்.
சில இளைஞர்கள் பார்த்தவுடன் இளம்பெண்கள் மீது ஆசை கொண்டு காதல் வலை வீசுவது வழக்கம். அப்படி ஒரு இன்ஸ்டா காதல் வலை விரித்த இளைஞர் காதலை ஏற்றுக் கொள்ளாததால் இளம் பெண்ணின் கதையை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். சேலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

சேலம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயரியில் படித்து வருகிறார். இவருக்கு ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோகனப் பிரியன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சேலம் கோரிமேட்டில் உள்ள ஐடிஐயில் படித்து முடித்து விட்டு தற்போது வேலை ஏதும் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியை காதலிப்பதாக மாணவன் தெரிவித்ததால் இருவருக்கும் வயது வித்தியாசம் உள்ளது என தெரிவித்து காதலை மறுத்துள்ளார். மேலும் மாணவனிடம் சரிவர பேசாமல் புறக்கணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் உறவினருடன் திருமணம் செய்ய பெண்ணின் தரப்பினர் முடிவு செய்து இருப்பது கூறப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட மோகன பிரியன் இன்று காலை பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மோகன பிரியன் திடீரென கத்தியை எடுத்து கல்லூரி மாணவியை குத்தி விட்டு தனது கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மூன்று மாதத்திலேயே எப்படி உன்னை காதலிப்பது? மேலும் வயது வித்தியாசம் தெரிந்து பழக வேண்டும். ஒழுங்காக உனது எதிர்காலத்தைப் பார் என அந்தப் பெண் வற்புறுத்தியதாகவும், ஆனால் தன்னை காதலிக்க வேண்டும் எனக் கூறிய படியே ஆத்திரத்தில் அந்த இளைஞர் இளம்பெண்ணை கத்தியால் குத்தியதாக அருகில் இருந்தோர் கூறியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு பெண்ணின் உறவினர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications