ஆவடி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் மொத்தமாக குவிந்த சென்னை மக்கள்.. நள்ளிரவில் அவதி
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் வெளி மாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வட மாவட்டங்களையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பகல் முழுவதும் பல மணி நேரம் இடைவிடாமல் மிதமான மழைபல இடங்களில் பெய்தது.

இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருக்கிறது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே சென்னை மாநகரம் முழுவதும் பல இடங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியது. அதிகப்படியான மழை மற்றும் தண்ணீர் தேங்கியபடியே இருந்த காரணத்தால், ரயில்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலுக்குபதில் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில்களும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதன்படியே நேற்று இரவு தொடங்கி, அதிகாலை வரை கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக வெளி மாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

முன்னதாக திடீரென சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு பதிலாக ஆவடியில் இருந்து சில விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆவடிக்கு, ரயில்கள் வந்துசேர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். ஆவடி ரயில் நிலையத்தில் நடைமேடைகள், நடைமேம்பாலத்தில் என சுமார் 5 ஆயிரம் பேர் வரை குவிந்ததால் ஆவடி ரயில் நிலையம் ஸ்தம்பித்தது.












Click it and Unblock the Notifications