ஆம்ஸ்ட்ராங்கிற்கு நாளை 16வது நாள் காரியம்! பழிக்கு பழி தீர்க்க மற்றொரு கொலை? உளவுத் துறை எச்சரிக்கை
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு பழிக்கு பழியாக கொலை செய்த தரப்பிலிருந்து நெருங்கிய உறவினர்கள் யாராவது கொலை செய்யப்படலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் பெருமாள் தெருவில் கட்டி வரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆயுதங்களை போலீஸாருக்கு காட்ட சென்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அவர் இறந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கையாக நடந்து வருகிறது.
திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் அஞ்சலையை பிடித்து விசாரிக்க போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளை ஆம்ஸ்ட்ராங்கிற்கு 16 ஆவது நாள் காரியம். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது அவருடைய 16 ஆவது நாள் காரியத்தின் போது எப்படியும் சம்பந்தப்பட்டவர்களை பழிக்கு பழி வாங்க கொலை செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நாளை 16 - ஆவது நாள் காரியம் நடைபெறுகிறது. எனவே நாளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை நடக்க வாய்ப்பிருக்கிறது என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து போலீஸார் சென்னையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
ரவுடிகளை ஒடுக்குவதே இலக்கு என சென்னை கமிஷனர் அருண் தெரிவித்திருந்த நிலையில் ரவுடிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் கொலையின் பழிவாங்கல்தான் காரணம் என்றால் அவருடைய உறவினர்களை பத்திரப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இன்று முதலே ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications