ஐஜேகே 6 வார்டில் வெற்றி.. அமமுகவில் அப்பா, மகன், மகள் வெற்றி.. உள்ளாட்சி தேர்தல் சுவாரசியங்கள்..!
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் அப்பா, மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றனர். இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் அம்மா மகன் வெற்றி பெற்றுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்திருந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பிறகு மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டன. 10 மணியிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை
பெரும்பாலான இன்னும் சில இடங்களில் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் சில இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களை வென்றுள்ளன. வெற்றியை கொண்டாடும் விதமாக அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்திய ஜனநாயக கட்சி
இதேபோல் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகக் கூறிய எஸ்.ஆர்.எம் கல்வி குழம நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி எனப்படும் ஐஜேகேவும் இரு நகராட்சி வார்டு உள்ளிட்ட 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மறைமலைநகர் நகராட்சி 1வது வார்டு, ஆத்தூர் நகராட்சியில் 16வது வார்டு, காட்டுப்புதூர், பாலகிருஷ்ணம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேந்தமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் தல ஒரு வார்டு எண் 6 வார்டுகளில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர்
மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வாக , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஏரல் பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 15வது வார்டு, 1வது வார்டு, மற்றும் 2வது வார்டில் அப்பா, மகன், மற்றும் மகள் மூவரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் அவர்கள் 3 பேருமே வெற்றி பெற்றுள்ளார்கள். 15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன் பால கவுதம் 2வது வார்டில் மகள் மதுமிதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தாய் - மகன் வெற்றி
இதேபோல் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்ட தாய் மகன் என இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். சோழவந்தான் பேரூராட்சியில் 13வது மற்றும் 8வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட தாய் வள்ளிமயில் மகன் மருதுபாண்டி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் ஒன்றாகவே வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications