தவெகவில் செங்கோட்டையனுக்கு மனக்கசப்பா? பொதுச்செயலாளர் ஆனந்த் அளித்த விளக்கம்!
சென்னை: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் மேலும் சில முக்கிய தலைவர்களை கொண்டு வருவார் என்று, விஜய் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் நடக்காததால், செங்கோட்டையன் மீது விஜய் அப்செட்டில் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இது உண்மை இல்லை என்று பொதுச்செயலாளர் ஆனந்த் மறுத்துள்ளார்.
நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். தவெக தலைவர் விஜய்யின் கீழ் அனைவரும் தொண்டர்தான். செங்கோட்டையனுக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று, குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன். இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்கு முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 10 நாட்களுக்கு மேல்.. பல நாட்கள் கடந்துவிட்டது. இது குறித்து கேட்டதற்கு கால அவகாசம் எல்லாம் எதுவும் கொடுக்கவில்லையே என்று சமாளித்தார். இருப்பினும் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்த எடப்பாடி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கினார்.
இதனையடுத்தும் எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து செங்கோட்டையன் பேசி வந்த நிலையில், கட்சியிலிருந்தே செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் எடப்பாடி நீக்கினார்.
இப்படி நீக்கப்பட்ட செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அங்கு அவருக்கு டீசண்டான பதவி வழங்கியது. அதாவது தவெகவின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
செங்கோட்டையனை கட்சிக்குள் கொண்டு வந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அதிமுகவில், அதிமுக தொண்டர் மீட்பு கழகம் போன்றவற்றில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை தங்கள் பங்கம் கொண்டுவர செங்கோட்டையன் உதவுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், மருது அழகராஜ் உள்ளிட்டோர் திமுகவுக்கு தாவினர். இதனால் தவெக தலைமை, குறிப்பாக விஜய் அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதன் வெளிப்பாடாகத்தான் செங்கோட்டையனுக்கு தவெக தேர்தல் பிரச்சாரக்குழுவில் மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தேர்தல் பிரச்சார குழுவில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், ஏ.பார்த்திபன் என பெயர்கள் வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் 3வது இடத்தில் இருந்தது, அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் செங்கோட்டையன் மனக்கசப்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இப்படி இருக்கையில்தான் செங்கோட்டையன் அப்செட்டில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று பொதுச்செயலாளர் ஆனந்த் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications