களைகட்டும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி... சென்னைக்கு வரும் சர்வதேச வீரர்கள்
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனா். இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டி களைகட்டத் தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10ந் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
Recommended Video
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவற்காக, சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் வீரர், வீராங்கனைகளுக்கு எந்தவித தடையின்றி, தங்கும் விடுதிகளுக்கு செல்ல சிறப்பு வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருந்து 4 வீரர்களும், ஜாம்பியா, ஹாங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து 2 வீரர்களும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் குழுவினர் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
அப்போது, விமான நிலையத்தில் உள்ள செஸ் ஒலிம்பியாட் சின்னம் அருகே, வெளிநாட்டு வீரர்கள் நின்று உற்சாகமாக புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அதேபோல் இன்று இரவு மலேசியாவில் இருந்தும், ஏர் பிரான்சிலிருந்து வரும் விமானங்களிலும் வீரர்கள் சென்னை வர இருக்கின்றனா். இவர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு நியமித்துள்ள சிறப்புக் குழுவினரும், செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இன்று முதல், ஆக்ஸ்டு மாதம் 6-ந் தேதி வரை, சர்வதேச வீரர்கள், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானம் முலம் சென்னைக்கு வருகை தர உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், போட்டியில் கலந்துகொள்ள சர்வதேச வீரர்கள் சாரை சாரையாக வருகை தருவதால், இந்த பிரம்மாண்ட போட்டி தற்போதே களைட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications