திருவொற்றியூர் பள்ளியில் மாணவிகளை தாக்கிய வாயு கசிவு! காரணம் என்ன? ஆய்வு நிறைவு!
சென்னை: வடசென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தற்போது நிறைவடைந்திருக்கிறது.
வடசென்னையில் வாழும் மக்கள் வாயு கசிவு குறித்து மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் எண்ணூரில் வாயு கசிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக முதியோர், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கண் எரிச்சல், மூச்சு திணறல் என பலரும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தனர். விசாரணையில் அமோனியா கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது திருவொற்றியூர் தனியார் பள்ளியிலும் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக 4 மாணவிகள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மீண்டும் மீண்டும் இதேபோல சம்பவம் நடந்ததையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக இந்த சம்பவத்தில் 35க்கும் அதிகமான மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வாயு கசிவு எங்கிருந்து ஏற்பட்டது? பள்ளி நிர்வாகம் ஏன் இதை சரியாக கையாளவில்லை என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், "காலை சுமார் 10.30 மணியளவில் வகுப்பறையில் அனைவருக்கும் இருமல் ஏற்பட்டது. ஒருவர் இருவர் எனில் வழக்கமான இருமல் என்று நினைக்கலாம்.. ஆனால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் இருமல் ஏற்பட்டது சந்தேகத்தை கிளப்பியது. ஆனாலும் கூட என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியேறினோம்.
சில மாணவிகள் மூச்சு திணறலால் கடுமையாக அவதிப்பட்டனர். அதில் ஓரிரு மாணவிகளுக்கு வலிப்பு ஏற்பட்டது. நான் உட்பட பல மாணவிகள் மூச்சுவிடவே கடுமையாக சிரமம் அடைந்தோம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து உடனடியாக அவர்களது பெற்றோருக்கு போன் செய்யப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அதன் மூலம் மாணவிகளை மருத்துவமனையில் அனுமதித்தது. எங்களுக்கும் முதலுதவி செய்யப்பட்டது" என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற காற்று தர ஆய்வு முடிவு குறித்து அறிக்கையை தயார் செய்கிறது மாசுக் கட்டுபாட்டு வாரியம். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications