வேங்கை வயல் சம்பவம்.. 3 மாதத்தில் விசாரணை நிறைவு அடையும்.. ஹைகோர்ட்டில் காவல்துறை உறுதி
சென்னை: வேங்கை வயல் கிராம குடிநீர் தொட்டி அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கில் மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு காவல் துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீயிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் எனவும் உறுதி தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications