கோதண்டராமர் கோவில் ஊழியர்கள் கண்களில் பயம்.. அச்ச உணர்வு இருந்தது.. ஆளுநர் ரவி குற்றச்சாட்டு
சென்னை: கோதண்டராமர் கோவில் பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ராமர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானங்களும் நடைபெற உள்ளன.

மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் ராமர் கோவில்களில் வழிபட்டு சிறப்பு பூஜைகளில் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றைய தினம் மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் சென்று வழிபட்டார். கோவிலுக்கு சென்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆளுநர்.
இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி












Click it and Unblock the Notifications