திமுகவினரை உற்சாகப்படுத்துகிறதா ஐ-பேக் யுத்திகள்..? தமிழகத்தை மறந்து மேற்கு வங்கத்தில் பி.கே. முகாம்
சென்னை: பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திமுகவுக்கு வகுத்துக் கொடுக்கும் பிரச்சார யுத்திகள் அனைத்தும், கட்சியினர் எதிர்பார்த்ததை விட சுமாராகவே உள்ளதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த தேர்தல் பணிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுப்பதாக திமுகவுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இங்கு அவரது நிறுவன ஊழியர்கள் தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கின்றனர். ஒரு காலத்தில் அண்ணா அறிவாலயம் ஊழியர்கள் கவனித்து வந்த ஒருங்கிணைப்பு பணிகளை தான் இப்போது ஐ-பேக் டீமும் கவனிக்கிறது. மற்றபடி மெச்சத்தக்க வகையில் புதிதாக ஐ-பேக் எதையும் செய்யவில்லை.
எல்லோரும் நம்முடன், ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போறாரு, அதிமுகவை நிராகரிக்கிறோம் என பல தலைப்புகளில் ஐ-பேக் சூட்டிய செயல்திட்டப் பெயர்கள் கிராமப்புற மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை.
தற்போதைய சூழலில் ஸ்டாலினின் சொந்த முடிவில் எடுக்கப்பட்ட கிராம சபைக் கூட்டங்கள் தான் ஓரளவு மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற ஒரே முழக்கத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் விளம்பர யுத்திகளையும் சிறப்பாக கையாளுகிறது.
மக்கள் மனதில் பதியும் வகையில் ஒரே முழக்கத்துடன் திமுகவிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே ஐ-பேக் ஆலோசனைகள் ஒரு புறம் இருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 2-ம் தேதி முதல் நேரடியாக களப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளார். இது கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையிலும் அமையவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.