முகத்தை தூக்கி மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்! அந்த விரக்தி! பினிஷ் செய்தது எப்படி? பரபர நொடிகள்!
சென்னை: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடிய விதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நேற்று தினேஷ் கார்த்திக் மன்னிப்பும் கேட்டார்.. அப்படி என்ன நடந்தது? மேட்சில் மாற்றத்தை ஏற்படுத்திய நொடி என்ன என்று பார்க்கலாம்!
பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான பவுலிங் காரணமாக பெங்களூர் படுதோல்வி அடைந்து இருந்தது. 200+ அடித்தும் அதை டிபண்ட் செய்ய முடியாமல் பெங்களூர் பவுலர்கள் சொதப்பினார்கள்.
இதனால் பெங்களூர் சில்க் போர்ட் சிக்னலில் காலை 10 மணிக்கு நிற்கும் டிராபிக் கூட்டம் போல.. பெங்களூர் அணியை பொளந்து கட்ட அந்த அணியின் அணியின் ரசிகர்கள் லைனில் காத்து இருந்தனர். ஆனால் நேற்று அடிபட்ட புலியாக பெங்களூர் அணி கோபத்துடன் ஆடியது.

கோபம்
முதல் ஓவரில் இருந்தே பெங்களூர் அணி சரியான திட்டத்தோடு பவுலிங் போட்டது. 4வது ஓவரின் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயரை ஆகாஷ் தீப் விக்கெட் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே ரஹானே விக்கெட்டை சிராஜ் எடுக்க ஆட்டம் மாறியது. ஒப்பனர்கள் காலி ஆனதும் ஆட்டம் கொல்கத்தா கையைவிட்டு போக தொடங்கியது. பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ஹசரங்கா ஓவரில் அவுட் ஆனார். நேற்று ஹசரங்கா சிறப்பாக பவுலிங் செய்து 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

விக்கெட்
அதேபோல் ஆகாஷ் தீப் 3 ஓவரில் 45 ரன்கள் கொடுத்தாலும் விக்கெட் எடுத்து அசத்தினார். முதல் போட்டியில் பெங்களூர் பவுலிங் மோசமாக இருந்தாலும் நேற்று பெங்களூர் பவுலர்கள் சிறப்பாக வீசி 18.5 ஓவரில் கொல்கத்தா அணியை 128-10 ரன்களுக்கு சுருட்டினர். இதன்பின் இறங்கிய பெங்களூர் அணி எளிதாக வெற்றிபெறும் என்று நினைத்தவர்களுக்கு ஷாக். பெங்களூர் தொடக்கத்தில் இருந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஓப்பனிங் இறங்கிய அனுஜ் ராவத் இந்த முறையும் மோசமாக ஆடினார்.

அவுட் மேல் அவுட்
டக் அவுட் ஆகி அவர் வெளியேற டு பிளசிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன்பின் கோலி வெறும் 12 ரன்களுக்கு அவுட்டாகி சென்றார். பின்னர் வந்த டேவிட் வில்லியும் அவுட்டாக பெங்களூர் அணி திணறியது. ஆனால் ஒருவழியாக ரூதர்போர்ட் 28, ஷாபாஸ் அஹமது 27 என்று அடித்து பெங்களூர் அணியை மீட்டனர். இவர்கள் இருவரும் ஆட்டத்தை முடிப்பார்கள் என்று கருதப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் அவுட்டானார்கள். இதன்பின்தான் பினிஷரான தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார்.

கையை விட்டு போனது
ஒரு பக்கம் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை பினிஷ் செய்ய காத்திருந்த நிலையில் எதிர் திசையில் ரூதர்போர்ட், ஹசரங்கா இருவரும் சவுதி ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் ஆட்டம் கையைவிட்டு போகும் நிலை இருந்தது. 19வது ஓவரை வீச ஆள் இல்லாத நிலையில்தான் வெங்கடேஷ் ஐயர் திடீரென பவுலிங் போட வந்தார். அந்த ஓவரில் முதல் பாலில் ஹர்ஷல் பட்டேல் சிங்கிள் அடிக்க அடுத்த பாலில் தினேஷ் கார்த்திக் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் அடித்தார்.

ஹர்ஷல் பட்டேல்
பொதுவாக பேக்வேர்ட் பாயிண்ட் திசைகளில் அடிக்கும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் பார்க்க மாட்டார்கள். எதிரே இருக்கும் நான் ஸ்டிரைக்கர் ஓடும்படி அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓடுவார்கள். ஆனால் நேற்று தினேஷ் கார்த்திக் ஹர்ஷல் பட்டேல் அழைத்தும் ஓடாமல் நின்றார். ஆனால் ஹர்ஷல் பட்டேல் ஓடி ஸ்டிரைக்கர் திசைக்கு வந்துவிட்டார். இதையடுத்து தவறை உணர்ந்த தினேஷ் கார்த்திக் வேகமாக ஓடி நான் ஸ்டிரைக்கர் திசைக்கு சென்றார்.

அவுட் இல்லை
நல்லவேளை அவர் அவுட்டாகவில்லை. இதையடுத்து தவறை உணர்ந்த தினேஷ் கார்த்திக், சீனியர் என்று நினைக்காமல், இளம் வீரர் ஹர்ஷல் பட்டேலிடம் சென்று மன்னிப்பும் கேட்டார். தலையை தூக்கி விளக்கம் அளித்தார். அதன்பின் ஹர்ஷல் பட்டேல் அதே ஓவரில் இரண்டு பவுண்டரி அடிக்க ஆட்டம் சூடானது. கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை. ரஸல் பவுலிங் செய்தார்.

சிக்ஸ்
பல பிளான்களை செய்து ரஸல் பவுலிங் போட.. முதல் பந்திலேயே அதை சிக்ஸர் பறக்கவிட்டார் தினேஷ் கார்த்திக். அடுத்த பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது அதை பவுண்டரிக்கு அனுப்பி பெங்களூர் அணியை வெல்ல வைத்தார் தினேஷ் கார்த்திக். பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் 7 பாலில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து அசத்தினார் தினேஷ் கார்த்திக். தனக்கு அளிக்கப்பட்ட பினிஷர் ரோலை சிறப்பாக செய்தார்.

புறக்கணிப்பு
கொல்கத்தா அணியில் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை என்று தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டார். இதில் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு இந்திய அணியிலும் இவரை ஓரம் கட்டிவிட்டனர். நல்ல பார்மில் இருந்தும் இவர் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளார். இதற்கு எல்லாம் சேர்த்து வைத்து தினேஷ் கார்த்திக் நேற்று பதிலடி கொடுத்தார். நிதாஸ் கோப்பை போட்டியில் வங்கதேசத்தை கடைசி பாலில் சிக்ஸ் அடித்து காலி செய்ததை நேற்று தினேஷ் கார்த்திக் நினைவுபடுத்தினார். இந்திய அணியில் இவரை போல இப்போது பினிஷர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications