அடேங்கப்பா! இவ்வளவு ரூபாயா? ஐபிஎல் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெல்லப்போவது சிஎஸ்கேவா அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணியா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கிடைக்க போகும் பரிசுத்தொகை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐபிஎல் போட்டி தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. மிகவும் விறு விறுப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குஜராத் டைட்ட்னஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடத்தை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தகுதி சுற்று ஆட்டத்தில் வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜாரத் டைட்டன்ஸ் அணியை பதம் பார்த்தது. இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து விட்டே விடை பெறுவார் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் வலுவான அணியாக உள்ளது. சுப்மான் கில் அசுரத்தனமாக பார்மில் இருக்கிறார்.
அதுபோக ரஷித் கான் பந்து வீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் அச்சுறுத்தல் கொடுக்கிறார். பலம் வாய்ந்த இரு அணிகள் பலப்பரிட்சை நடத்தும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கிறது. இதனிடையே, வெற்றி பெறும் அணிக்கு கிடைக்கப் போகும் பரிசுத்தொகை குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடியும் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கு வந்த அணிகளுக்கும் தலா ரூ 7 கோடி பரிசுத்தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தமாக பரிசுத்தொகையாக ரூ.46.5 கோடியாக நடப்பு ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளதாம். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு அதாவது பர்ப்பிள் கேப் வைத்து இருக்கும் வீரருக்கு ரூ.15 லட்சமும் வளர்ந்து வரும் வீரர் விருதை பெறும் வீரருக்கு ரூ.20 லட்சமும் அதிக மதிப்பு மிக்க வீரருக்கு ரூ.12 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்ட கடந்த 2008 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.4.8 கோடியும் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு 2.4 கோடியும் பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பரிசுத்தொகை அதிகரித்தே வந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு பல கோடிகள் அதிகரித்து இருப்பதால் அதற்கேற்றவாறு பரிசுத்தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications