ஓய்வு பெறும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்.. டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா இறையன்பு ஐஏஎஸ்?
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் இறையன்பு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுகிறாரா?
சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் இறையன்பு, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை நியமித்தார். இவர் சேலம் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த எழுத்தாளர். கூடவே தன்னம்பிக்கையை கொடுக்கும் பேச்சாளரும் ஆவார்.
சமூக அக்கறை கொண்ட இவர் வழக்கம் போல தலைமைச் செயலாளர் பணியிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ஆண்டு அனுப்பியிருந்த சுற்றறிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது.

கிராம ஊராட்சி தலைவர்கள்
அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்டும் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் யாராவது பட்டியலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் குடியரசு தினம், சுதந்திர தினங்களின் போது அவர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைக்காது. இந்த வாய்ப்பை அந்த ஊரோ இல்லாவிட்டால் துணைத் தலைவரோ தட்டி பறித்துவிடுவார்.

தீண்டாமை
அனைவருக்கும் பொதுவான தேசிய கொடியை ஏற்றுவதில் என்ன தீண்டாமை, என்ன ஜாதிய பாகுபாடு என்பதுதான் அனைவருக்கும் உள்ள கேள்வியாகும். இதற்காக முன்னெச்சரிக்கையாக இறையன்பு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில் 75 ஆவது சுதந்திர தினத்தில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஜாதிய பாகுபாடு
அது மட்டுமல்லாமல் எங்காவது ஜாதிய பாகுபாடுகளை வைத்து கொடியேற்ற விடாமல் யாராவது தடுத்தால் ஒரு கைபேசி உதவி எண்ணையோ அல்லது புகாரை பெற ஒரு அலுவலகரையோ நியமிக்க வேண்டும் என்ற ஒரு கண்டிஷனையும் போட்டிருந்தார். இறையன்புவின் இந்த சுற்றறிக்கை அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

இறையன்பு
இந்த நிலையில் இறையன்பு இந்த மாதத்துடன் ஓய்வு பெற போகிறார். இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற ரேஸில் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இறையன்புவுக்கு மீண்டும் தலைமைச் செயலாளர் பதவியை நீட்டித்தால் அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். கடந்த அதிமுக ஆட்சியில் இதே போல் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட போது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.

இறையன்பு சேவை
இதனால் இறையன்புவின் சேவையை வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு விரும்புவதாக தெரிகிறது. இதனால் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் (TNPSC) தலைவராக இறையன்புவை நியமிக்கலாமா என்ற யோசனையில் உள்ளதாம். டிஎன்பிஎஸ்சியின் தலைவராக 2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் யார்
அவர் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் போட்டித் தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பதவி நீண்டநாட்களாக காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக உள்ள முனியநாதன் ஐஏஎஸ்ஸை தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை முனியநாதன் பொறுப்பு தலைவராக இருப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த தலைவர் பதவிக்கு இறையன்புவை கொண்டு வரலாம் என தமிழக அரசு யோசனையில் இருந்து வருவதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை. அதன்படி இறையன்பு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் இருப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications