1,00,00,00,00,00,000 ரூபாய் ஒரே நாளில் போச்சு.. இந்தியர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!
சென்னை: மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் பதற்றம் உலக பொருளாதாரத்தையும், பங்குச் சந்தைகளையும் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வருவதும், அதில் அமெரிக்காவின் நேரடி தலையீடும் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் நேற்று தெளிவாக தெரிந்தது. ஒரே நாளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் மற்றும் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் பதற்றம் காரணமாக பங்குகள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது.
இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வர்த்தகத்தின் போது 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இறுதியில் சென்செக்ஸ் 1,122.66 புள்ளிகள் சரிந்து 79,116.19 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் கடுமையாக சரிந்தது. நிப்டி 385.20 புள்ளிகள் குறைந்து 24,480.50 புள்ளிகளில் முடிந்தது.

இந்திய பங்குச்சந்தை சரிவு
வர்த்தகத்தின் போது நிப்டி 24,400 என்ற நிலைக்கும் கீழே சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு இது போன்ற சரிவு பதிவாகியுள்ளது. இந்த சரிவுக்கு பின்னணியாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சென்செக்ஸ் நிப்டி வீழ்ச்சி
இதனால் கடும் ஆவேசமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது பல்வேறு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த தொடங்கியது. அதோடு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் சூழல் தீவிரமடைந்துள்ளது. இந்த போர் தற்போது ஆறாவது நாளாக உக்கிரமாக தொடர்கிறது.
ஈரான் இஸ்ரேல் போர்
சமீபத்தில் இஸ்ரேல், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக டெஹ்ரான் நகரில் பல இடங்களில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், அவசர சேவை வாகனங்களின் சைரன் சத்தம் தொடர்ந்து ஒலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவும் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதாக கூறப்படுகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் டிரோன் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை அழித்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலேம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேலை நோக்கி அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை சுற்றி பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பெரும்பாலான ஏவுகணைகளை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த போர் காரணமாக உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்துக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவாகியுள்ளது. இதனால் பங்குகளை விற்பனை செய்யும் நிலை உருவாகி சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் பலவீனமடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு 92-க்கும் கீழ் சரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முதலீட்டாளர்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications