‛‛ரூ.55 டூ ரூ.1,130’’.. தமிழகத்தில் மீண்டும் உயரும் மின்கட்டணம்? பரவும் தகவலால் மின்வாரியம் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், குறைந்தபட்சம் ரூ.55 முதல் அதிகபட்சம் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் என்பது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தான் விரைவில் தமிழக அரசு சார்பில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவ தொடங்கி உள்ளன.

அதன்படி குறைந்தபட்சம் ரூ.55 முதல் அதிகபட்சமாக ரூ.1,130 வரை மின்கட்டணம் என்பது அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரப்பபட்டு வருகிறது.
இதுதொடர்பாக கவுரி சங்கர் என்பது தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛திமுகவின் அடுத்த விடியல் மின்சார கட்டணம் உயர்வு'' என்ற தலைப்பில் மின்கட்டண உயர்வு தொடர்பான கார்டு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த கார்டில் வீடுகளுக்கு தற்போது 2 மாதங்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.170ல் இருந்து ரூ.55 அதிகரிக்கப்பட்டு ரூ.225 ஆக வசூலிக்கப்படும். 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்வோருக்கான கட்டணம் என்பது ரூ.530ல் இருந்து ரூ.145 அதிகரித்து ரூ.675 ஆக வசூலிக்கப்படும். 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ830ல் இருந்து ரூ.295 அதிகரித்து ரூ.1,125 ஆக வசூலிக்கப்படும்.

500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் செலுத்த வேண்டிய ரூ.1,130 கட்டணம் ரூ.595 கூடுதல் தொகையுடன் ரூ.1,725 ஆக செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 600 யூனிட்டுக்கான மின்கட்டணம் ரூ.2,446ல் இருந்து ரூ.2,756 ஆகவும், 700 யூனிட்டுக்கான மின்கட்டணம் ரூ.3,110ல் இருந்து ரூ.3,660 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி 800 யூனிட்டுக்கான மின்கட்டணம் ரூ.3,760ல் இருந்த ரூ.4,550 ஆகவும், 900 யூனிட்டுக்கான மின்கட்டணம் என்பது ரூ.4,420ல் இருந்து ரூ.5,550 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது 900 யூனிட் பயன்படுத்தினால் பழைய கட்டணத்தை விட ரூ.1,130 அதிகம் செலுத்த வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பதிவு வலைதள பக்கங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் லோக்சபா தேர்தல் முடிவடைந்த பிறகு மீண்டும் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறதா? என பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் போலியானது என எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதோடு இணையதளத்தில் பரவும் கட்டண உயர்வு விபரம் என்பது தமிழ்நடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07ன்படி 9.9.2022ம் தேதியின் படியான கட்டண விகிதம். இது முற்றிலும் பழைய செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டணம் உயர்வு இல்லை என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications