"பாதகம்".. ஸ்டாலின் கையில் 2 அஸ்திரம்.. சட்டசபை பக்கமே போக வேண்டாம்.. எடப்பாடி டீம் பரபர முடிவு?
சென்னை: நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அழைப்பின் பெயரில் அவரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அதிமுக இபிஎஸ் கோஷ்டி ஆலோசனை கூட்டத்தில் 61 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றதாக கூறப்பட்டது. அதேபோல் 60 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

என்ன ஆலோசனை?
இந்த அதிமுக கூட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். அதாவது சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 17-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் என்ன பேசலாம். என்ன ஆலோசனை செய்யலாம் என்று நேற்று விவாதம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு எதிராக என்ன மாதிரியான பிரச்சனைகளை கையில் எடுக்கலாம். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி பேசலாமா என்றும் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர்.

2 அஸ்திரம்
அப்போதுதான் சில அதிமுக எம்எல்ஏக்கள் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை வருகிறதே என்ன செய்வது என்று கேட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது. இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாகவும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இதில் போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகின. ஸ்டாலின் கையில் உள்ள இந்த இரண்டு சாஸ்திரமும் அதிமுகவிற்கு எதிராக இருக்கும், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முக்கிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்தான் சட்டசபைக்கு செல்ல வேண்டுமா என்று அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

சபாநாயகர்
ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் சட்டசபைக்கு செல்ல மாட்டார். சட்டசபை பக்கமே அடியெடுத்து வைக்க மாட்டார். அதேபோல் இந்த முறை மொத்தமாக எல்லா அதிமுக எம்எல்ஏக்களும் சேர்ந்து சட்டசபையை புறக்கணிக்கலாமா என்றும் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம். இதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சபாநாயகர் என்ன சொன்னார்?
இது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். ஆர்பி உதயகுமாரை துணை தலைவராக தேர்வு செய்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவது என்றால் அதற்கு சபாநாயகர்தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்பாவு என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.

இருக்கை
இது தொடர்பாக இரண்டாவது முறையாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு மீண்டும் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாகவே அப்போதே விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, இதில் சட்டப்படி, நியாயப்படி, விதிப்படி நாங்கள் நடப்போம். ஜனநாயக முறைப்படி, ஒருதலைபட்சம் இல்லாமல்.. விதிப்படி நாங்கள் நடப்போம். தனிப்பட்ட முறைப்படி யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி நடப்போம். அவங்க கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. யாருக்கு எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளது என்று நான் சொல்ல முடியாது. கோர்ட் முடிவு எடுக்கட்டும். என்னை பொறுத்தவரை அவர்களின் எல்லா எம்எல்ஏக்களும் இரட்டை இலை சின்னத்தில் வென்று வந்தவர்கள். அவர்கள் ஏன் எதிர்கட்சித் துணை தலைவரை மாற்றுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். கடிதத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.

புறக்கணிப்பு
இதில் சபாநாயகர் முடிவு எடுக்காததை கண்டிக்கும் வகையில் அவையை புறக்கணிக்கலாமா என்றும் எடப்பாடி தரப்பு ஆலோசனை செய்துள்ளதாம். இந்த நிலையில்தான் சட்டசபையில் எடப்பாடிக்கு அருகே ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று கோரிக்கை வைக்கவும் எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம். நேற்று நடந்த மீட்டிங்கில் இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். ஓ பன்னீர்செல்வதை வேறு இடத்தில் அமர வைக்க சொல்லலாம். இல்லை என்றால் மொத்தமாக கூட்டத்தொடரை புறக்கணிக்கலாம். அவருக்கு அருகில் எல்லாம் அமர முடியாது, அதனால் கூட்டத்தையே புறக்கணிக்க நேர்ந்தாலும் புறக்கணிக்கலாம் என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி நடத்திய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

சபாநாயகர்
சபாநாயகர் அப்பாவு இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றாலும் முன்பே இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார். அதில், ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். இப்போதே அறிவிக்க முடியாது. இரண்டு பேருமே மூத்த தலைவர்கள். இரண்டு பேருமே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுபடியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications