ஆஹா.. அதிமுக, அமமுக ஒன்னா சேரப் போகுதோ.. புதிய பரபரப்பு
அதிமுகவுடன் அமமுக இணையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: பிரிந்தவர்கள் திரும்பவும் இணைய போகிறார்களா? அதிமுகவும் - அமமுகவும் கூடிய சீக்கிரம் சேரப்போகிறதா?
அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் ஏதோ சுமூக தீர்வுக்கு காய் நகர்த்தி வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. ஜெயலலிதா இறந்ததிலிருந்து டிடிவியும், முதல்வர் எடப்பாடி தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
ஆனாலும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு இவர்கள் இருவருக்குமே தற்போது இல்லை. குறிப்பாக ஆளும் தரப்பு மீது மக்கள் அதிருப்தியாகத்தான் உள்ளனர். அது தற்போது கஜா புயல் பார்வையிட சென்றபோது இன்னும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

இணைவார்களா?
அதேபோலதான் டிடிவி தினகரனும். எவ்வளவோ முட்டி மோதியும் தோல்வி முகம்தான் கிடைத்து வருகிறது. தேர்தலும் நெருங்கி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் பிரிந்தவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று இரு தரப்பிலுமே உணர தொடங்கியுள்ளனர்.

தங்க.தமிழ்செல்வன்
அதனால் அமமுகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கட்சியில் இணையும்படி மறைமுகமாக அழைப்பு விடுத்து வருகின்றனர். "அதிமுக, அமமுக இரு கட்சிகளும் வேறல்ல. இரு கட்சிகளும் இணைந்தால் நல்லது தான். திமுகவை எதிர்ப்பதற்காக எல்லா கசப்பான நிகழ்வுகளையும் மறந்து அமமுகவுடன் இணையுங்கள்" என்று தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார்.

கடம்பூர் ராஜூ பதில்
இதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, "அதிமுக என்பது, திமுக கருணாநிதி தீய சக்தி என்று வர்ணித்து தொடங்கப்பட்ட கழகம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் யாருடைய துணையுமின்றி திமுக-வை எதிர்த்த வலிமை அதிமுகவுக்கு உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஏற்கனவே அறிவித்தது போல் பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேர்ந்தால் அவர்களை சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்" என்றார்.

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நமது அம்மா நாளிதழ் இன்று "கூட்டுக்கு திரும்பும் பறவைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், "பாதை மாறிப்போன பாசப்பறசைவகள் எல்லாம் பச்சிலையாம் ஈரிலை இயக்கம் நோக்கி, பழி துடைத்து திரும்புவதாக" கூறப்பட்டுள்ளது.

மா.செ.கூட்டம்
இந்நிலையில், சென்னையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தகூட்டம் நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

சாத்தியம் உருவாகுமா?
அதிமுக பொதுக்குழு தேதி முடிவு செய்வது குறித்தும், 20 தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும், அதிமுக, அமமுகவின் அடுத்தடுத்த நிகழ்வுகளை பார்க்கும்போது, இந்த கூட்டத்தில் இரு அணிகள் ஒன்றிணைப்பு நடக்கும் சாத்தியம் உருவாகும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications