அண்ணாமலை அரசியலுக்கு முழுக்கு? அடுத்தடுத்த 3 முக்கிய மேட்டரை கவனிச்சீங்களா! பாஜக மீது அதிருப்தி?
சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திடீரென்று பால் பண்ணை மற்றும் முதலீட்டு நிறுவனம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் தான் அண்ணாமலை விரைவில் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா? என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது. மேலும் இந்த கேள்விக்கு வலு சேர்க்கும் வகையில் சமீபத்தில் 3 மேட்டர் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இது அதிமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி உள்ளார். இதற்கிடையே தான் தற்போது அவரது செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அவர் அரசியலை விட்டு செல்கிறாரா? பாஜக மேலிடம் மீது அதிருப்தி உள்ளதா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
முதல் மேட்டர்
இதற்கு வலு சேர்க்கும் வகையில் சமீபத்திய 3 சம்பவங்கள் உள்ளன. இதில் முதல் சம்பவம் என்னவென்றால் கடந்த 3ம் தேதி டெல்லியில் தமிழக பாஜக தலைவர்கள் கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல், அதிமுக கூட்டணியுடனான செயல்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இது சந்தேகங்களை எழுப்பியது. இதுபற்றி கேட்டதற்கு அண்ணாமலை மேலிட தலைவர்களிடம் முன்கூட்டியே தகவல் சொல்லியதாக கூறி நழுவினார். இது முதல் மேட்டராகும்.
2வது மேட்டர்
அடுத்ததாக இன்று டெல்லியில் துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு அண்ணாமலைக்கு ஆழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், எச் ராஜா உள்பட பல தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆனால் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
அண்ணாமலைக்கும், சிபி ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இருவரும் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள். இப்படியான சூழலில் தான் சிபி ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவுக்கு அண்ணாமலை செல்லாதது அவரது அதிருப்தியை வெளிப்படுத்தும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் காலை முதல் கூறி வருகின்றனர். இது 2வது மேட்டராகும்.
3வது மேட்டர்
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அண்ணாமலை தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்று ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் பால் பண்ணை மற்றும் முதலீட்டு நிறுவனம் நடத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார். இது 3வது மேட்டராகும்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‛‛எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் 'We the Leaders' அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.
வட்டி செலுத்தும் அண்ணாமலை
ஆம். கடந்த ஜூலை 12ம் தேதி விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன்.
நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10ம் தேதி காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு, எனது பவர் ஆப் அட்டர்னி வழங்கப்பட்டது.
பால்பண்ணை தொடங்க திட்டம்
இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம். மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்.
தொழில் முதலீட்டு நிறுவனம்
நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து, உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.
தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில்சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.
வெட்டியாக நேரம் செலவழிக்க விரும்பவில்லை
இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
அடுத்தடுத்து நடந்த இந்த 3 மேட்டர்களும் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அண்ணாமலையின் இத்தகைய நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அவரது ஆதரவாளர்களும் குழம்பி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications