பாஜக தமிழ்நாட்டில் வேகமா வளருதா? துரைமுருகன் காமெடி பண்றாரு.. சீண்டிய திருமாவளவன்!
சென்னை : தமிழகத்தில் பாஜக ராட்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக கூறியிருப்பார் எனத் தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
சமீப சில ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாகப் களமிறங்கி, அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
பாஜக தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், பாஜகவின் வளர்ச்சியை ஒப்புக்கொள்வது போல அமைச்சர் துரைமுருகனின் சமீபத்திய பேச்சு அமைந்திருந்தது.

பாஜக தீவிரம்
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக நாடு முழுவதும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கணிசமான இடங்களை பெற்றே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், ஆலோசனைக் கூட்டங்கள் என பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகின்றனர் பாஜகவினர். பூத் கமிட்டிகளை வலுவாக அமைப்பதில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி மேலிட தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுச் செல்கின்றனர்.

பிசாசு போல பாஜக
இந்நிலையில் தான் சமீபத்தில் வேலூரில் திமுக கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், இதுவரை நமது எதிரி அதிமுகவை எதிர்த்தோம். இந்த முறை நாம் ராட்சசனை பார்க்கப் போகிறோம். பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக. இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்கப் போகிறோம். பணம் மற்றும் அதிகார பலத்தோடு போராடுவார்கள். அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் எனப் பேசினார்.

ஒப்புதல்
தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவின் மூத்த அமைச்சர் ஒருவரே, பாஜகவின் வளர்ச்சியை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தமிழ்நாட்டில் ஒருபோதும் வளரவே முடியாது என ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், பாஜகவின் பலம் அபாயகரமானதாக வளர்ந்து வருவதாகவும், பாஜகவை எதிர்க்க திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்கிற ரீதியிலும் அமைச்சர் துரைமுருகன் பேசியது மிகுந்த கவனத்திற்கு உள்ளானது.

துரைமுருகன் நகைச்சுவை
இந்நிலையில் தான், துரைமுருகனின் பேச்சு பற்றி, திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் எம்.பி பதில் அளித்துள்ளார். "தமிழகத்தில் பாஜக ராட்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக கூறியிருப்பார். அவர் அடிப்படையிலேயே ஒரு நகைச்சுவை பேச்சாளர். தமிழ்நாட்டில் பாஜகவை கண்டு யாரும் அச்சப்படவில்லை" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரையவிட்டு விட்டார்
மேலும், "அதிமுகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். ஆனால் பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று அவர் கூறியிருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குரலாகத்தான் பேசுகிறார் என்று கருத வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கரைய விட்டு விட்டார், கைவிட்டு விட்டார். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க நிர்வாகி போல் செயல்படுகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications