‘பெரிய தலைவலி’.. அவசரமா அங்கே போனது தப்பு.. ‘திரும்ப வாங்குங்க’ - பறந்த ஆர்டர்.. அப்செட்டில் ஈபிஎஸ்!
சென்னை : ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிற்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தால் 'பெரிய சிக்கல்' காத்திருப்பதால், அந்த ஆவணத்தை திரும்பப் பெற ஈபிஎஸ் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தான் இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் பதவிகளில் இருந்து விலகுவதாக தேர்தல் ஆணையத்தில், சி.வி.சண்முகம் மூலம் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
இப்போது, பொதுக்குழு வழக்கில், இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்குமாறு ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் தான் அளித்த பிரமாண பத்திரத்தை, அவரை வைத்தே திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிரடி தீர்ப்பு
ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தற்போது பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்றாகிவிட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தான் இருக்கிறார்கள்.

அவசர அவசரமாக
பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பொருளாளர், துணை பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பூர்வமாக அதனை பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தேர்தல் ஆணையத்திலும், இது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

ராஜினாமா
எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த ஆவணங்களில், பொதுக்குழு எடுத்த முடிவின்படி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகுவதாகவும், தேர்தல் ஆணைய பதிவுகளில் இதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம் அனுப்ப திட்டம்
இந்நிலையில், ஐகோர்ட் தீர்ப்பையடுத்து இணைந்து பணியாற்ற எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தும் அவர் நிராகரித்து விட்டதால், தேர்தல் ஆணையத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கே கடிதம் எழுத ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய சிக்கல்
இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக ஈபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் தான் தாக்கல் செய்த ஆவணங்களால் இப்போது தனக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று சமர்ப்பித்த அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்தை வைத்தே அதனை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் ஈபிஎஸ்.

எடப்பாடி அப்செட்
பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே, உடனடியாக சட்டப்பூர்வமாக பதிவு செய்தால் தான் நீதிமன்றங்களில் நமக்கு பலம் கூடும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் வலியுறுத்தியதன் பேரிலேயே எடப்பாடி பழனிசாமியும் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்களை அனுப்பியுள்ளார். இப்போது அதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சி.வி.சண்முகத்தை கடிந்து கொண்டாராம் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications