மிடில் கிளாஸ் மக்கள் கடன் வாங்கி வீடு வாங்கலாமா? இதில் உள்ள பிரச்சனைகள் என்ன! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தற்போது இருக்கும் பொருளாதார சூழலில் மிடில் கிளாஸ் மக்கள் வீடு வாங்குவது சரியாக இருக்குமா என்பதை பற்றி பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
சொந்தமாக ஒரு வீடு என்பதே இங்கு பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களின் கனவாக இருக்கிறது. இதனால் கொஞ்சம் வருமானம் வர ஆரம்பித்ததுமே பல லட்சம் கடனை வாங்கி வீடுகளை வாங்கிவிடுகிறார்கள். பிறகு ஓய்வு பெறும் வரை அதற்கான வட்டியைக் கட்டி வருகிறார்கள்.

இதுபோல செய்வது சரிதானா.. மிடில் கிளாஸ் மக்கள் இப்போது இருக்கும் சூழலில் சொந்தமாக வீடுகளை வாங்கலாமா என்பதை பற்றி பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கடன் கூடாது: இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "முதல் விஷயம் கடன் வாங்கி வீடு வாங்கவே கூடாது.. 2010-2012க்கு முன்பு இருந்த நிலை வேறு. அப்போது வீட்டின் மதிப்பில் 20% தொகையைக் கொடுத்தாலே போதும்.. உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து 30 அல்லது அதிகபட்சம் 45 நிமிட பயண நேரத்தில் வீடு வாங்கிவிட முடியும். மேலும் அப்போது கடன் வாங்கினாலும்.. நாம் வாடகைக்குக் கொடுக்கும் பணத்திற்கு இணையாகவே இஎம்ஐ தொகை இருக்கும்.. மேலும், அந்தக் காலகட்டத்தில் நாம் கட்டும் வட்டி தொகையை வருமான வரியிலும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.
அதாவது வாடகைக்குப் பதிலாக இஎம்ஐ, அதற்கு வருமான வரி சலுகையும் கிடைக்கும், வீட்டுக் கடனை முடித்தால் வீடும் சொந்தமாகும், அதுவும் நீங்கள் வேலை செய்யும் ஏரியாவிலேயே வீடு வாங்க முடியும் என்ற சூழல் இருந்தது. இதனால் அந்த காலகட்டத்தில் நாட்டின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் பலரும் வீடு வாங்கினர். இதன் காரணமாக வீட்டின் விலை பல மடங்கு எகிறிவிட்டது.
பிரச்சினைகள்: சென்னையில் நீங்கள் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்க வேண்டும் என்றால் பொதுவாக ரூ.1.20 கோடியை கடனாக வாங்க வேண்டும்.. ரூ.1.20 கோடி கடன் வேண்டும் என்றால் கணவன் மனைவி இணைந்து 3 லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அப்படியும் உங்களின் சம்பளத்தில் 50% கடனுக்கே போய்விடும் என்ற சூழல் இருக்கும். அதை வாடகைக்கு விடலாமே என்ற கேள்வி வரலாம். ஆனால், வாடகைக்கு விட்டால் ஆண்டுக்கு அதிகபட்சம் 5 லட்சம் தான் வரும். அதாவது உங்கள் முதலீட்டில் வெறும் 3 முதல் 4 சதவிதிகம் மட்டுமே வாடகை மூலம் வருமானமாக வரும். அதற்கு மேல் வாடகை கேட்டால் யாரும் வாடகைக்கு வர மாட்டார்கள். இது ஒரு பிரச்சினை..
அதேபோல இப்போது நிலத்தின் விலையை எல்லாம் பல மடங்கு ஏற்றிவிட்டார்கள். கட்டுமான செலவுகளும் அதிகரித்துவிட்டது. இதனால் வீட்டின் விலை அதிகரித்துவிட்டது. இன்றைய காலகட்டத்தில் உங்களால் குறைந்த விலையில் நகரில் வாங்கவே முடியாது. 30, 40 லட்சத்திற்கு வீடு வாங்க வேண்டும் என்றால் கேளம்பாக்கம் போல நகருக்கு வெளியே செல்ல வேண்டும். நமது ஊரில் பொது போக்குவரத்தும் சிறப்பாக இல்லை. எனவே, தினசரி வேலைக்குச் சென்று வருவது சிரமமாகவே இருக்கும். எனவே அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வங்கிக் கடன்: நீங்கள் கடனை வாங்கி ஒரு வீட்டை வாங்கி உள்ளீர்கள் என்றால் அந்த கடனை கட்டி முடிக்கும் வரை அந்த வீட்டிற்கு வங்கி தான் ஓனர். நீங்கள் கட்டும் இஎம்ஐ தொகையை அதிகரிக்காமல் இருக்கும் போது உங்கள் வட்டி விகிதம் சற்று உயர்ந்தாலும் கூட நீங்கள் கடனை திரும்பச் செலுத்தி முடிக்க வேண்டிய காலம் எகிறிப் பல ஆண்டுகள் கூடுதலாகக் கடனை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
மேலும், இப்போதெல்லாம் நாம் ஒரே நகரில் வாழ்க்கை முழுக்க வேலை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நகரிலும் சில பல ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு ஊரில் வீடு வாங்கி, திடீரென வேறு ஒரு ஊருக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போதும் சிக்கல் தான். மேலும், புதிய நகரிலும் நீங்கள் வாடகை கொடுக்க நேரிடும்.
யார் வாங்கலாம்: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது ரூ. 40 ஆயிரம் வாடகையில் இருக்கும் வீட்டை வாங்க 1.5 கோடி ரூபாய் தர தேவையில்லை. ரூ. 70, 80 லட்சம் இருந்தாலே போதும் என்ற சூழல் வரும் வரை வீடு வாங்காமல் இருப்பது நல்லது. சேமிப்பு எல்லாம் செய்துவிட்டேன், அதிகப்படியாக இருக்கும் பணத்தில் தான் வீடு வாங்கப் போகிறேன் என்றால் தாராளமாக இப்போது கூட வீட்டை வாங்கலாம்.
மிடில் கிளாஸ் எப்போது வாங்கலாம்: இப்போது இருக்கும் சூழலில் மிடில் கிளாஸ் மக்கள் வீடு வாங்காமல் இருப்பதே சரி.. ஒன்று உங்கள் சம்பளம் எல்லாம் பயங்கரமாக அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வீட்டின் விலை நன்கு குறைய வேண்டும். அதுவரை மிடில் கிளாஸ் மக்கள் கடன் வாங்கி வீடு வாங்காமல் இருப்பதே நல்லது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications