வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை மெரினாவில் கடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பாஜக சார்பில், ‛‛திருவள்ளூவரை விட கருணாநிதி என்ன சிறந்தவரா?'' என கேள்வி எழுப்பி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு இருந்த மீனவர்கள் கடும் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை மெரினா கடலில் 8,551.13 சதுர மீட்டரில் 42 மீட்டர் உயரத்துக்கு கலைஞர் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. கருணாநிதியின் பொன் மொழிகள் நினைவு சின்ன பீடத்தில் பதிக்கப்பட உள்ளன.
கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைய விடமாட்டேன்! பேச விடாமல் கூச்சல்- சீமான் குற்றச்சாட்டு
கருத்து கேட்பு கூட்டம்
இந்த பேனா நினைவு சின்னம் அமையும் இடம் கடல் என்பதால் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை, மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. அதை பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னர் தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம். அதன்படி தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.
காணொலி மூலம் விளக்கம்
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பிற அரசியல் கட்சிகள், பல அமைப்புகளின் நிர்வாகிகள், ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்தது. மேலும் அங்கு கருத்து தெரிவித்த சிலருக்கு மேடையிலேயே உடனடியாக சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. முதலில் பேனா நினைவு சின்னத்தின் கட்டுமானம் எப்படி இருக்கும், எந்தெந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து காணொலி வாயிலாக விரிவாக விளக்கப்பட்டது.
பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு
இந்த கூட்டத்தில் மீனவர்களின் ஒரு பகுதியினர் மற்றும் வணிக அமைப்பினர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதுதொடர்பாக மீன்வர்கள் சார்பில், ‛‛ பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பெருகும். பேனா நினைவிட பீடத்தில் இருக்கும் பாசிகளை மீன்கள் திண்று இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். இதனால் பேனா நினைவு சின்னம் அமைப்பது சரியானது தான்'' என ஒரு தரப்பு மீனவ்ரகள் தெரிவித்தனர். வணிக அமைப்பினர் சார்பில், ‛‛பேனா நினைவு சின்னம் அமைத்தால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவாகும். வணிகம் பெருகும்'' என பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கண்டன கோஷம்
இந்த கூட்டத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தலைவர் இளங்கோ பேசினார். அப்போது, ‛‛இந்த திட்டத்தால் மீன்வளம் பாதிக்கும். இது சட்ட விதிகளுக்கு எதிராக அமைக்கப்படுகிறது'' என தெரிவித்தார். இதை கேட்ட சில மீனவர் அமைப்பினர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேடையில் இருந்து கீழே இறங்க வேண்டும் என கண்டன கோஷமிட்டனர். இதையடுத்து சமாதானம் செய்யப்பட்டனர். மேலும் இளங்கோ பேசுகையில், ‛‛கருணாநிதியின் புகழை பேசுவதற்காக இது அமைக்கப்பட உள்ளது. அதனை ஏன் சுற்றச்சூழல் பாதிக்கப்படும் வகையில் கடலுக்குள் அமைக்க வேண்டும். இந்த சின்னத்தை கடலுக்கு நடுவே அமைப்பதை தவிர்த்து மாற்று இடத்தில் நிறுவ வேண்டும். கருணாநிதி போற்றப்படும் தலைவர் தான்'' எனக்கூறினார்.
திருவள்ளூவரை விட சிறந்தவரா?
இந்த சமயத்தில் பாஜக மீனவர் பிரிவு மாநில தலைவர் எம்சி முனுசாமி தரப்பிலும் பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் மேடையில் பேசுகையில், ‛‛கருணாநிதி நினைவு பேனா சின்னத்தால் மீன்வளம் பாதிக்கப்படும். இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கருணாநிதி திருவள்ளூவருக்கு சிலை அமைத்தர். 133 அடியில் அந்த சிலை அமைந்துள்ளது. பேனா நினைவு சின்னம் 42 மீட்டர் 137 அடியில் அமைக்கப்பட உள்ளது. வள்ளூவரை விட கருணாநிதி என்ன சிறந்தவரா?'' என கேள்வி எழுப்பினார்.
சலசலப்பு
இந்த கேள்வி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கூற வந்திருந்தவர்கள் எம்சி முனுசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக கோஷமிட்டால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பேச்சை கைவிட்டு வந்தார். இதையடுத்து கூட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே பேச வேண்டும். அரசியல் சார்ந்த கருத்துகள் பேச வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டு கொாண்டனர்.