உச்சக்கட்ட பரபரப்பு.. கைதாகிறாரா செந்தில் பாலாஜி? லெட்டருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரி.. சம்மனா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 17 மணி நேரத்துக்கும் அதிகமாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் உலா வருகின்றன. அதற்கான வாய்ப்புகள் உள்ளதா? விரிவாக பார்ப்போம்.
கரூர் மற்றும் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் செவ்வாய் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கரூரில் உள்ள அவரது வீட்டில் 15 மணி நேரமாக நடைபெற்ற நடைபெற்ற சோதனை நிறைவடைந்து இருக்கிறது. அதேபோல் சென்னை அடையாறு கிரீன் வேஸ் சாலையில் இருக்கும் அவரது வீட்டில் 17 மணி நேரம் கழித்து சோதனை நிறைவடைந்தது.

அதேநேரம் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இரவிலும் சோதனை தொடர்கிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற சோதனையில் ஈடுபட்ட அதிகாரி முதலில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிகாரி சோதனைக்கு வந்தார்.
7 அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் அடையாறு இல்லத்தில் சோதனை செய்தனர். துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று உள்ளது. அமலாக்கத்துறை யின் வாகன ஓட்டுநர்கள் அதிகாரிகளுக்காக இரவு உணவை எடுத்து வந்து கொடுத்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், வழக்கமாக சம்மன் வழங்கிய பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்படும். சம்மன் அளித்து ஒருவரை விசாரணைக்காக அழைத்து சென்று அதன் பிறகே கைது செய்யப்படுவது வழக்கம்.
எனவே சம்மன் கொடுக்காமல் செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது. அதே நேரம் புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் உடனடியாக கைது செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் இரவு 10.30 மணியளவில் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரியின் கையில் கடிதம் ஒன்று இருந்திருக்கிறது. அது செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்து செல்வதற்கான சம்மனா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அந்த அதிகாரி செந்தில் பாலாஜி வீட்டுக்கு வரும்போது துணை ராணுவப் படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர். நுங்கம்பாக்கத்தில் அமைந்து இருக்கும் அமலாக்கத்துறையின் அலுவலகத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் செந்தில் பாலாஜி வீட்டு அருகே உள்ளனர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது வீடு நோக்கி பல்வேறு இடங்களில் இருந்து வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அடையாறு பகுதி பெரும் பரபரப்போடு காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications