ஓ இதுதான் மேட்டரா? இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி? டெல்லி களமிறக்கும் பிளான்! இப்படி ஒரு ரூட்டா?
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு புதிய ரூட் ஒன்றை மத்திய பாஜக தரப்பு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
சமீபத்தில் பிரதமர் மோடியை இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டி பேசி இருந்தார். சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரையில் அவர் குறிப்பிட்டு இருந்த சில விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையானது.

மோடி கருத்து
பிரதமர் மோடி பற்றி இளையராஜா கூறிய கருத்தில், நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி. மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.

மறுப்பு
இந்த நிலையில் நேற்று இளையராஜா தன்னிடம் சொன்னதாக கங்கை அமரன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார். அது தன்னுடைய சொந்த கருத்து என்றார். அதே சமயம் தன்னுடைய கருத்து பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை விமர்சிக்கவும் மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் கூறினார் என்று கங்கை அமரன் குறிப்பிட்டு இருந்தார்.

முடியாது
பிரதமர் மோடி பற்றிய அந்த புத்தகத்தை நான் முழுமையாக படித்தேன். புத்தகத்தை முழுமையாக படித்த பின்புதான் நான் என் கருத்தை தெரிவித்தேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

எம்பி பதவி
இவரின் கருத்தை பாஜகவினர் வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு புதிய ரூட் ஒன்றை மத்திய பாஜக தரப்பு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி பொதுவாக குடியரசுத் தலைவர் 12 பேரை ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களாக நியமிக்க முடியும். பல்வேறு துறையில் சிறப்பாக செயல்படும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எம்பி பதவி வழங்க முடியும்.

பாஜக பிளான்
பல பிரபலங்கள் இப்படி எம்பி ஆகி இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டவர்கள் எம்பி ஆனது இப்படித்தான். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து பெரும்பாலும் இந்த பதவிக்கு பலர் தேர்வாவது இல்லை. பெரும்பாலும் வடஇந்திய பிரபலங்கள்தான் இப்படி எம்பி பதவிக்கு தேர்வாகி இருக்கிறார்கள். ஆனால இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதில் இளையராஜா இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது.

பாஜக ஆதரவா?
பிரதமர் மோடியை இளையராஜா பாராட்டியதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது அவரின் இசை பணியை பாராட்டும் வகையில் கொடுக்கப்படும் எம்பி பதவி. சச்சின் கிரிக்கெட்டில் செய்த சாதனையை யாரும் செய்தது இல்லை. இளையராஜாவும் அதேபோல் இசைத்துறையில் செய்த சாதனையை யாரும் செய்தது இல்லை. அதை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த எம்பி பதவி அளிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications