கமல் + ஸ்டாலின்.. ஈரோடு கிழக்கில் இணைந்து மேடையேறுவார்களா? “19.. 24”.. இடிக்குதே.. சான்ஸ் இல்லையாமே?
மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு நிகரான எதிர்பார்ப்பு இன்னொரு விஷயத்திலும் நிலவியது. அது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மநீம தலைவர் கமல்ஹாசனும் ஒரே மேடையில் இணைந்து பங்கேற்பார்களா என்ற கேள்வி தான். அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். மநீம தலைவர் கமல்ஹாசன் 19ஆம் தேதி இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இடைத்தேர்தல் களம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவனீதன் என 77 பேர் களத்தில் உள்ளனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த முறை தேர்தலை சந்திக்கப் போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இடைதேர்தலை சந்திக்க அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் பின்வாங்கி, இரட்டை இலையில் நிற்கும் தென்னரசுவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார்.

கமல் ஆதரவு
திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். முன்னதாக, காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் இணைந்தார் கமல்ஹாசன். ராகுல், கமலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று தனது படை பட்டாளத்தோடு டெல்லி சென்று ராகுலுடன் நடைபயணத்தில் பங்கேற்று, கூட்டத்திலும் உரையாற்றினார்.

புதிய கூட்டணி
மேலும், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வந்தார் கமல்ஹாசன். அதன் மூலம் திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணிக்கு ரெடியாகி வந்ததாகவே கருதப்பட்டது. 2024 தேர்தலுக்கு மநீம - திமுக கூட்டணியில் இணையும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டு இப்போதே இந்தக் கூட்டணிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல் ஆதரவு தெரிவித்ததால், இந்தக் கூட்டணி உறுதியாக அமையும் என பேச்சுகள் எழுந்தன.

அஸ்திவாரம்?
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு ஒரே மேடையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசுவதற்கும் தயாராகி விட்டார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்த மேடை தான் 2024 கூட்டணிக்கு ஸ்ட்ராங்காக அஸ்திவாரம் போடப்போகிறது, இதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட உள்ளார்.

கமல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களிக்கக் கோரி, வரும் 19ஆம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார். பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் கமல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு, மாலை 6 மணியளவில் சம்பத் நகர், மாலை 6.30 மணிக்கு வீரப்பன்சத்திரம் பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக மாலை 7 மணியளவில் ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

ஸ்டாலின் வேறு நாளில்
அதேசமயம், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின், வேறு நாட்களில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல, கமல்ஹாசனும், 19ஆம் தேதி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனோடு இணைந்து வாக்கு சேகரிப்பது தான் தற்போது வரை திட்டம். வேறு கூட்டங்கள் எதிலும் கமல் பங்கேற்கும் திட்டமில்லை என மநீம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே மேடை? வாய்ப்பில்லை
இதனால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மநீம தலைவர் கமல்ஹாசனும் ஒரே மேடையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாகப் பங்கேற்கும் கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்று 2024 கூட்டணியை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தச் சூழல் இப்போது அமையாது என்றே தெரிகிறது. இது மநீம தொண்டர்களுக்கு சற்றே உற்சாகக்குறைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications