கொஞ்ச நாள்தான் இருக்கு.. மகன் எதிர்காலம் என்ன ஆகுறது.. எடப்பாடியிடம் "சமாதானம்" செய்யும் ஓபிஎஸ்?
ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இன்றி அவரின் மகனின் அரசியல் எதிர்காலமும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக அமைதியாக இருக்கிறார்.
அதிமுக உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி இந்த நீண்ட மோதலில் ஒருவழியாக வென்றுவிட்டார். கட்சி நிர்வாகிகள் சப்போர்ட், பொதுக்குழு உறுப்பினர்கள் சப்போர்ட், மாஜி அமைச்சர்கள் சப்போர்ட், எம்எல்ஏக்கள் சப்போர்ட் என்று எல்லாம் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி இதில் எளிதாக வென்றுவிட்டார்.
நீதிமன்றம் வழியாக கட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த ஓ பன்னீர்செல்வம் ஏமாற்றம் அடைந்து உள்ளார். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.

தீர்ப்பு
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும். மேலும் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பேட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. நாங்கள் திறமையாக வாதம் வைக்கவில்லையா என்று தோன்றுகிறது.இதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை இவர்கள் வீழ்த்த பார்க்கிறார்கள். அதை அனுமதிக்க கூடாது. இவர்களின் செயல் சட்ட விதிகளுக்கு எதிரானது. இவர்களுக்கு யார் இந்த அனுமதியை கொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்.

சிவில் வழக்கு
தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்வோம். தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுகுழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு முடிவுகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் செல்வோம். உச்ச நீதிமன்றம் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தேர்தல் ஆணையத்திடம் சொல்லுவோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவிற்கு எதிராக நாங்கள் பதில் மனு தாக்கல் செய்வோம், என்று கூறி உள்ளார்.

ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியும்
ஆனால் சிவில் வழக்கு தொடுத்தால் அதில் முடிவு வர பல வருடங்கள் ஆகும். 7 - 10 வருடங்கள் ஆனாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். இதனால் சிவில் வழக்கு தொடுக்க வேண்டுமா என்ற சந்தேகத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறாராம். அதைவிட எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானமாகி சென்று ஒரு பதவியை பெறுவது சரியாக இருக்குமே என்று நினைக்கிறாராம். இதற்கு வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறதாம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 - 14 மாதங்கள்தான் இருக்கின்றன.

எம்பி தேர்தல்
அதற்குள் ஓ பன்னீர்செல்வம் ஏதாவது ஒரு இடத்தில் ஐக்கியம் ஆக வேண்டும். அப்போதுதான் மகன் ரவீந்திரநாத் எம்பி மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிட முடியும். அதிமுகவில் மீண்டும் இணையவில்லை என்றால் ரவீந்திரநாத் எம்பி ஆவது பெரிய சிக்கல் ஆகும். சுயேட்சையாக போட்டியிட்டு மகனை எம்பி ஆக்க முடியாது. ஒன்று பாஜகவில் இணைய வேண்டும். அல்லது அதிமுக மூலம்தான் மீண்டும் எம்பி ஆக வேண்டும். ஓ பன்னீர்செல்வத்திற்கு வேறு வழியில்லை என்பதால்.. எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானமாகி சென்று விடலாமா என்று யோசிக்க தொடங்கி உள்ளாராம். இதனால்தான் கடந்த இரண்டு நாட்களாக அவர் கருத்தும் சொல்லாமல்... மகனுக்காக அமைதியாக இருக்க முடிவு செய்து உள்ளாராம் ஓ பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications