மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் படங்கள் இயக்கும் முன்பு தமிழகத்தில் ஜாதி அடக்குமுறை இல்லையா? இதோ டேட்டா!
சென்னை: கடந்த பல வருடங்களாக இளம் தலைமுறை ஜாதி பார்க்கவில்லை என்றும், ஆனால் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள், ஜாதி வேறுபாட்டை படங்களில் காட்டி மறந்ததை நினைவூட்டுகிறார்கள் என்பதும் வலதுசாரிகள் வாதமாக உள்ளது.
இதன் நீட்சியாக, நாங்குநேரி சாதிய பயங்கரத்துக்கு இயக்குநர்கள் பா.ரஞ்சித்தும், மாரி செல்வராஜுமே காரணம் என்று ஒரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வைத்து வருகின்றனர்.இப்பவெல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறார்கள்..? சென்னையில யாருங்க சாதி பார்க்கிறாங்க.. 2கே கிட்ஸுகளிடம் சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டே பெயரை வைத்தும், ஊரை வைத்தும், குலதெய்வத்தை வைத்தும், அப்பா, தாத்தா பெயரை வைத்தும் ஜாதியை அறிய முயல்பவர்களே இங்கு அதிகம். சென்னையில் ஜாதி பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டே வெளிப்படையாக ஜாதி பெயரை குறிப்பிட்டு வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் ஏராளம்.

வெளிப்படையாக ஜாதியை சொல்லாமல், அசைவம் வேண்டாம் என்று சுற்றி வளைத்து ஜாதி திணிக்கப்படுவது நடக்காமல் இல்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் வைப்பது, வெளிப்படையாக ஜாதி கேட்பது போன்றவை தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் ஜாதி பற்று, குடி பெருமை என்ற பெயரில் பலரது உள்ளத்தில் ஜாதி குடி கொண்டு இருக்கிறது.ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்ட மாமன்னன் போன்ற படங்களையே ஜாதி வெறியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வில்லனை ஹீரோவாக்கி அற்ப சுகம் கண்டனர். இப்படிப்பட்ட ஜாதி வக்கிரத்தின் ஒருமித்த முகத்தைதான், வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களிடமும், நாங்குநேரி சிறுவனை வெட்டிய பள்ளி மாணவர்களிடமும் கண்டோம்.
நாங்குநேரி பழி: பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன், த.செ.ஞானவேல், சுசீந்திரன், கவுதமராஜ் போன்றவர்கள் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி படம் எடுக்கும்போதெல்லாம், இப்பவெல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்? இவர்கள்தான் அதை நியாபகப்படுத்துகிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.தேவர்மகன், எஜமான், சின்ன கவுண்டர் தொடங்கி திரௌபதி, முத்துராமலிங்கம், குட்டிப்புலி, கொம்பன் போன்ற சாதியை அடிப்படை வாழ்வியலாக கொண்ட படங்கள் வரும்போது கண்டுகொள்ளாதவர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என்றால் மட்டும் வரிந்துகட்டிக் கொண்டு வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் நடந்த நாங்குநேரி நிகழ்வுக்கு பிறகாவது, இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும் என்று இவர்கள் பேசுவார்கள் என்று நினைத்தால், மொத்த பழியையும் ரஞ்சித், மாரி செல்வராஜ் மீது போட்டுவிட்டார்கள். அண்ணாமலை, கிருஷ்ணசாமி: நெட்டிசன்கள் மட்டுமின்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுதான் வினோதம். ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் படம் எடுப்பதற்கு முன் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள், தீண்டாமை கொடுமைகள், சாதிய மோதல்கள் நடக்காததை போன்றும், அவர்கள் வந்து படமெடுத்து சாதி பிரச்சனைகளை தூண்டி விட்டதைபோன்றும் உள்ளது இவர்களின் வாதம்.

திரைப்படங்கள்: பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற படங்கள் வெளிப்படையாக சாதி பிரச்சனைகளை பேசவில்லை. எளிய, பட்டியலின, சென்னையின் பூர்வக்குடி மக்களின் வாழ்வியலையே அவை பெரிதும் பேசின. காலா, கபாலியில்தான் ரஞ்சித் வெளிப்படையாக சாதி, நில உரிமை குறித்து பேசி இருப்பார். ஆனால், அதுவும் தமிழ்நாட்டில் நடக்கும் கதையாக காட்டி இருக்க மாட்டார். பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாளில் பட்டவர்த்தமாக தென் மாவட்டங்களில் உள்ள சாதிய பிரச்சனைகளை உடைத்து பேசி இருப்பார். அதை தொடர்ந்து வந்த அவரது கர்ணன், மாமன்னன் படங்களிலும் சாதி பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட்டு இருக்கும். வெற்றிமாறனின் அசுரன், த.செ.ஞானவேலுவின் ஜெய்பீம் முதலிய படங்களிலும் சாதி பிரச்சனைகள் பேசியுள்ளன.
ஜாதி இல்லையா, யார் சொன்னது: இதில் பரியேறும் பெருமாளை நாம் எடுத்துக்கொள்வோம். அந்த படம் வெளியான ஆண்டு 2018. அதற்கு முன் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகளே வரவில்லையா? ஆணவக் கொலைகளே நடக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் சாதி ஆணவ படுகொலைகள் என்றால் தற்போதைய தலைமுறைக்கு நினைவில் இருப்பது உடுமலை சங்கரும், கோகுல் ராஜும்தான். இந்த 2 ஆணவக் கொலைகளுமே 2018க்கு முன்பு நடந்தவைதான். வெளியில் பிரபலமானது இந்த 2 கொடூரங்கள். ஆனால், கடந்த 2018 ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி நமது ஒன் இந்தியா தமிழில் வெளியான செய்தியில் தமிழ்நாட்டில் மட்டும் அந்த நாளுக்கு முந்தைய 1000 நாட்களில், அதாவது 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 81 ஆணவக் கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜாதி கொலைகள்: அதேபோல் 2015 ஆம் ஆண்டு நாங்குநேரி அமைந்து இருக்கும் நெல்லை மற்றும் அதன் அருகேயுள்ள தூத்துக்குடி மாவட்டங்களை சேர்த்தால் 10 மாதங்களில் மட்டும் 100 சாதிய கொலைகள் நடந்து இருப்பதாக அப்போதே, நமது ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஆணவக் கொலை, அரசியல் கொலைகள், பழிக்குப்பழி போன்ற பல்வேறு காரணங்கள் அடக்கம். ஆனால் அனைத்தும் மூலக் காரணம் சாதிதான். இவையெல்லாம் வெளியில் வழக்காக பதிவானவை. ஊர் கட்டுப்பாடு, பெற்றோர், உறவினர்களுக்கு அஞ்சி பல குற்றங்கள் காவல் நிலையத்தில் வழக்காகவே பதியப்படுவது இல்லை. ஊடக வெளிச்சத்துக்கும் வருவதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேதி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாக கூறி 2 தலித் இளைஞர்கள் 10 பேர் கொண்ட ஆதிக்க சாதி கும்பலால் கொல்லப்பட்டதை தமிழ்நாடு மறந்திருக்காது.
புள்ளி விவரங்கள்: கடந்த 2011 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரனின் 54 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஜாதிய வன்முறையை தொடர்ந்து பரமக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தது தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுவாகவே இன்னும் உள்ளது. இப்படி இந்த படங்கள் வருவதற்கு முன்பும் தமிழ்நாட்டில் ஜாதியால் ரத்த ஆறு ஓடிக் கொண்டு இருந்ததற்கு மேற்குறிப்பிட்ட புள்ளி விபரங்களும், சம்பவங்களும் உதாரணம். சாதி ஒழிப்பு படங்களை விமர்சிக்கும், மேற்கண்ட வலதுசாரி அரசியல் தலைவர்கள் எல்லாம் மேற்குறிப்பிட்ட சம்பவங்களை மறந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை படித்தகாக சொன்ன முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இதை எப்படி மறந்திருப்பார்? எனவே வசதியாக எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, சாதி ஒழிப்பையும், சமூக நீதியையும் வலியுறுத்தி படம் எடுத்தவர்களை குற்றம்சாட்டுவது என்பது எப்படி சரி?

படத்தில் உள்ளதுபோலவா நடக்கிறது: காலம்காலமாக ஆதிக்க சாதி பெருமை பேசி படம் எடுத்தபோது வாய்திறக்காதவர்கள், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்வந்து தங்கள் வலிகளையும், வாழ்வியலையும் பேசி படம் எடுக்கும்போது, அவர்கள் பேசுவதே தவறு என்றும், அவர்களால்தான் கலவரமே ஏற்படுகிறது என்பது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல். "எஜமான் காலடி மன்னெடுத்து.." "நாட்டாமை பாதம் பட்டால்.." "தேவர் காலடி மண்ணே.." என்று ஆண்ட சாதி பெருமை பேசிய பாடல்களும் வரும் படங்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்க, அதற்கு எதிராக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல், வலி, சமூக நீதி பேசும் படங்களுக்கு விதை போடப்பட்டு தற்போது சிறிய மருந்து செடியாக துளிர்விட்டு உள்ளது. பெரிய விஷ மரம் வளர்ந்து நிற்பதை கண்டுகொள்ளாமல் அருகில் உள்ள மருந்து செடியை மிதிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். "நீயெல்லாம் பேச வந்துட்டியா?" என காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து ஆதிக்க சாதியினர் எழுப்பிய சாதிவெறி கேள்வியின் நீட்சியாகவே பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் மீது இவர்கள் வைக்கும் விமர்சனங்கள் உள்ளன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களை பார்த்து இளைய தலைமுறை சாதி வெறியேறி அலைவதாக சொல்பவர்களுக்கு கடைசியாக ஒரு கேள்வி... பரியேறும் பெருமாளில் ஜாதி ஆணவ கொலை செய்ய அந்த முதியவர் கடைசியில் ரயில் முன்பு தற்கொலை செய்துகொள்வார். அது போல ஆதிக்க ஜாதியை சேர்ந்த யாராவது தற்கொலை செய்து உள்ளார்களா என்ன? அது தவறு என தெரிந்துதானே செய்வது இல்லை.
கோகுல்ராஜ் தெரியுமா: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தண்டனை பெற்ற பிறகும் யுவராஜ் கெத்தாகதானே நடந்து செல்கிறார். கொலையாளி என்று தீர்க்கமாக தீர்ப்பு சொன்ன பிறகும்அவரது படத்தை வைத்து சாதி பெருமை பாடல்களை ஓடவிட்டு ரீல்ஸ்தானே போட்டார்கள். உண்மை நிலை இப்படி இருக்க, இந்த படங்கள் பிறரை கொலை செய்வதற்கு மட்டும் தூண்டுகிறது என்ற வாதம் எப்படி சரியாகும்? ரஞ்சித்தும், மாரியும், வெற்றிமாறனும், ஞானவேலும், மடோன் அஸ்வினும், கௌதமராஜும், சுசீந்திரனும் தங்கள் மனதில் உதிக்கும் கருத்துக்களை படமாக்குவதை தடுக்க யாருக்கு உரிமையுள்ளது. எந்த ஜாதியையும், எந்த மதத்தையும் குறிப்பிட்டு சீண்டாதபோது கருத்து சுதந்திரத்தில் தலையிட எந்த தார்மீக அடிப்படை உள்ளது? ஒரு வேளை அதை தடுக்க நினைத்து கண்டபடி கதை அளந்துவிட்டால், தெருவில் இருந்த தீண்டாமை பரிணாம வளர்ச்சி பெற்று டிஜிட்டல் தீண்டாமையாக மாறியுள்ளது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டுமேயன்றி, வேறு இல்லை. அப்படியானால் திருந்த வேண்டியதும் இந்த இயக்குநர்கள் இல்லை, அவர்களை நோக்கி கை காட்டுபவர்கள்தான்!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications