நிஜமாவா.. 2024 லோக்சபா தேர்தலில்.. ராமநாதபுரத்தில் போட்டியிடும் மோடி? பாஜகவின் மாஸ்டர்பிளான்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. 25 இடங்களில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று பாஜக திட்டம் போட்டு வருகிறது.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் பாஜக வெற்றிபெறும். 2026ல் ஆட்சியை பிடிப்பதே எங்கள் நோக்கம். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு எம்பிக்களை கொடுத்தால், தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் பிரதமர் மோடி செய்வார் என்று அண்ணாமலை கூட சமீபத்தில் கோயம்புத்தூர் கூட்டத்தில் பேசி இருந்தார்.

பூத் கமிட்டி
தமிழ்நாட்டில் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா கூட சமீபத்தில் தமிழ்நாடு பயணத்தின் போதே கட்டளை போட்டு இருந்தார். ஆனால் இன்னும் பூத் வாரியாக பாஜகவிற்கு ஆள் பிடிக்க முடியவில்லை. பாஜக இதில் இன்னும் பின்னடைவை சந்தித்தே வருகிறது. பாஜக என்றாலே பூத் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வலிமைதான். பூத் கமிட்டியை அமைத்து அதன் மூலம் ஆட்களை பிடிப்பதுதான் பாஜகவின் தேர்தல் வியூகம். பல மாநிலங்களில் பாஜகவிற்கு இது சாதகமான முடிவை கொடுத்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பூத் வாரியாக இன்னும் வலிமை அடையவில்லை. இதற்கான பணிகளை பாஜக செய்து வருகிறது.

ராமநாதபுரம்
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார். அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு
முக்கியமாக தமிழ்நாட்டில் அதிக எம்பிக்களை வெல்ல பாஜக முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.வாரணாசி மற்றும் ராமநாதபுரம் இரண்டு தொகுதிகளிலும் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கான பரிசீலனைகள் மட்டும் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

2019
2019 தேர்தலிலேயே தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மோடியை களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதேபோல் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக இருந்தது. கடைசியில் வயநாட்டில் அவர் போட்டியிட்டார். அந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றிபெற.. ராகுல் காந்தி போட்டியிட்டதும் காரணமாக அமைந்தது. அதேபோல்தான் பாஜகவும் மோடியை தமிழ்நாட்டில் களமிறக்கி தமிழ்நாட்டில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோடி ராமநாதபுரம்
ராமநாதபுரம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாவட்டம் ஆகும். அதேபோல் இங்கே மீனவர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும் ராமநாதசாமிகள் கோவில் தொடங்கி தீர்த்த தலங்கள் என்று பல இந்து புராணத்தளங்கள் இருக்கும் பிரசித்திபெற்ற இடமாகவும் இந்த மாவட்டம் உள்ளது. இதனால் பிரதமர் மோடி இந்த பகுதியில் போட்டியிட திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் பட்சத்தில் ராமநாதபுரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் குறையும் வாய்ப்புகளும் இருப்பதால், இந்த செய்தி கவனம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கான பரிசீலனைகள் மட்டுமே இப்போது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications