3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பியதால் ஆளும் தவெக அரசு, எதேச்சாதிகார போக்குடன் 3 சேனல்களையும் முடக்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய இணையமைச்சருமான எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பியதால் ஆளும் தவெக அரசு, எதேச்சாதிகார போக்குடன் 3 சேனல்களையும் முடக்கியுள்ளது.
ஜனநாயகத்தின் 4 ஆவது தூணான ஊடகங்கள் தான், அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுத்து விட முடியும் என தவெக அரசு எண்ணுகிறது.
3 சேனல்கள் முடக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் செயலற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசு, ஊடகங்களை முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் எதிலும் உண்மையில்லை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா?
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை தவெக அரசு கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக இதே குற்றச்சாட்டை உதயநிதி தொடங்கி எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையாக வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் ராஜ்மோகன், "3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்பந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் எப்போது சரியாகும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications