ஒரு லட்சம் வாக்குகள் காணாமல் போனதா? பாஜக கோட்டை விட்டது இங்க தான்..! என்னென்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் தமிழக பாஜகவினர் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருக்கும் நிலையில் கள நிலவரம் என்ன? என்பது குறித்து விசாரித்த போது பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் லோக்சபா தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்த வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான வன்முறை சம்பவங்களோ அல்லது பிரச்சனைகளோ இல்லாத வகையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சுமார் 69 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில் வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
திமுகவுக்கு சாதகம்?: இந்த நிலையில் ஏழு கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெற இருக்கிறது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்பதுதான் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாகவே நாடாளுமன்றத் தேர்தல் ஆனது பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் களம் இறங்கி இருக்கும் நிலையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதுகிறது. கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கின்றன.
அதிமுக-பாஜக: அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சந்திக்கும் மிகப்பெரிய தேர்தல் என்பதால் அவர் மீதான நம்பிக்கையை தொண்டர்களிடையே நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படியாக தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் முட்டி மோதி வரும் நிலையில் மூன்றாவதாக பாஜகவும் களத்தில் குதித்து இருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் தனித்தும் போட்டியிட்டு வந்த பாஜக தற்போது தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி அதில் போட்டியிட்டுள்ளது. மேலும் கட்சியின் முக்கிய பிரபலங்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் களமிறங்கி இருப்பதால் நிச்சயம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அல்லது இரண்டாவது கட்சியாக வரவேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பாஜக புகார்: வாக்கு சதவீதத்தையும் குறிப்பிடத்தகுந்த அளவு எட்டிவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு அது பயனளிக்கும் என பாஜகவினர் கருத்துகின்றனர். அதே நேரத்தில் தேர்தலின் போது பல இடங்களில் பாஜகவினர் பிரச்சினை செய்ததை பார்க்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் வாக்குப்பதிவு நடைபெற்ற போது நிறைய பேர் தங்கள் வாக்குகளை காணவில்லை.. தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என புகார் கூறினர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் ஒரு லட்சம் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லட்சக்கணக்கில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் கூறினர்.
பெயர் நீக்கம்: இதே கருத்தை பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வமும் முன் வைத்தார். அதே நேரத்தில் அதிமுக திமுக சார்பில் இந்த விவகாரமானது பெரிய அளவில் எடுத்துச் செல்லப்படவில்லை. இது குறித்து மூத்த நிர்வாகிகளிடம் பேசிய போது தான் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது தேர்தல் நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே வரைவு வாக்காளர் பட்டியலும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறதா அல்லது நீக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலேயே தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
பூத் கமிட்டி: திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வாக்காளர்கள் பெயர்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய பூத் கமிட்டி அமைத்து தீவிரமாக பணியாற்றினர். அதன் காரணமாக திமுக அதிமுக உள்ளிட்ட பலரின் நிர்வாகிகள் கட்சியினை சேர்ந்தவர்கள் மற்றும் பொது வாக்காளர்கள் என அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் பாஜகவில் தற்போது தான் பூத் கமிட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் தங்கள் கட்சியின் பெயர்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய அவர்கள் தவறிவிட்டனர் என்கின்றனர்.
ஏற்க முடியாது: மேலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமை இதற்காகத்தான் வரைவு வாக்காளர் பட்டியலும் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது தங்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு இருந்தால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்கின்றனர் பல ஆண்டுகாலமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திமுக அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள். எனவே இந்த விஷயத்தில் பாஜக கோட்டை விட்டுள்ளது. அதே நேரத்தில் விடுபட்டு போன அனைவரும் பாஜகவுக்கு தான் வாக்களிக்க இருந்தனர் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications