சீனியர் ஜூனியர் அமைச்சர்கள் இடையே மோதலா? இரண்டு நொடி யோசித்து சபாநாயகர் அப்பாவு அளித்த நறுக் பதில்
சென்னை: திமுகவில் மூத்த அமைச்சர்களுக்கும் இளைய அமைச்சர்களுக்கும் இடையே மோதல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான கேள்விக்குச் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏன் எதிர்க்கிறது என்பது குறித்தும் அவர் விரிவான விளக்கத்தைக் கொடுத்தார்.
முன்னாள் தமிழக முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மாநிலம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி "சட்டமன்ற நாயகர் கலைஞர் " என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மற்றும் பேச்சுப் போட்டிகளைச் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் துணைச் சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபாநாயகர் அப்பாவு: இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையைக் குலக் கல்வித் திட்டத்துடன் ஒப்பிட்டு விமர்சித்த சபாநாயகர் அப்பாவு, புதிய கல்வி கொள்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்றார். மேலும், மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்,
இது தொடர்பாகச் சபாநாயகர் அப்பாவு மேலும் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் முதல் பணியே கல்வி தான். நமது நாட்டில் கல்வியில் வளர்ந்து தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மிகச் சிறந்த ஒரு கல்வி கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. நாம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.
நிதி தர வேண்டும்: மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு முதல் சமிக்ரா அபியான் திட்டத்தின் மூலம் தொடர்ந்து நிதி கொடுத்து வருகிறது. திடீரென புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி தருவோம் என்கிறார்கள். இப்படிச் சொல்வது தவறு. இது மக்களின் வரிப் பணம். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய முறையில் நிதி தர வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையில் என்ன இருக்கிறது.. 5ம் வகுப்பில் பாஸ் ஆக முடியவில்லை என்றாலே குலக் கல்விக்குச் செல்ல வேண்டும், சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டும், தன்னாட்சி அங்கீகாரம் ரத்து எனப் பல முரண்கள் உள்ளன. இதன் காரணமாகவே தமிழக அரசு இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்துள்ளோம். இதைக் கெடுக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது.
கல்வி கடன்: எளிய மக்களுக்குக் கடன் தரத் தயங்கும் வங்கிகள், பெரிய பெரிய தொழிலதிபர்களுக்குக் கடனை தள்ளுபடி செய்கிறது. சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்து இருக்கிறது. பெரும் தொழிலதிபர்களுக்கு இதுபோல கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமா? தொழிலதிபர்களுக்கான கடனை தள்ளுபடி செய்யும் அரசு ஏழை மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கடன் தருவதில்லை.. இது மட்டுமின்றி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 11,000 கோடி கல்விக் கடனை மத்திய அரசு ஏன் தள்ளுபடி செய்ய முன்வரவில்லை" என்றார்.
அமைச்சர்கள்: அப்போது திமுகவில் மூத்த அமைச்சர்களுக்கும், இளைய அமைச்சர்களுக்கும் பிரச்சனை இருப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "சும்மா விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோல சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை" என்று ஒரு வரியில் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications