நம்பிக்கை வாக்கெடுப்பில் இதுவரை இல்லாத ஒன்றா? தயவு செய்து உட்காருங்க.. கோபமான சபாநாயகர்
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த வாக்கெடுப்பில் கடந்த காலங்களில் இல்லாத ஒன்றாக, ஏன் ஆதரிக்கிறோம் என்று வரிசையாக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பேசி வருகிறார்கள். அந்தவகையில் முதலில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் பேசினார். அப்போது விஜய்யை வெகுவாக புகழ்ந்தார்.
ஒரு கட்டத்தில் ராஜேஷ் மதச்சார்பற்ற அரசு அமைந்துள்ளது என்றும், பாஜகவை தமிழகமக்கள் நிராகரித்துவிட்டதாகவும், ஒரு எம்எல்ஏதான் உள்ளார்கள் என்றும் கூறினார். அத்துடன் பாஜகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சபாநாயகர் குறுக்கிட்டு, தயவு செய்து உட்காருங்க என்றார். ஆனால் அதனையும் மீறி தொடர்ந்து கூச்சலிட்டார்.

ஒரு கட்டத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அந்த எம்எல்ஏவிடம், இந்த ஆட்சியை ஏன் ஆதரிக்கிறோம் என்று பேசவும், ஏன் எதிர்க்கிறோம் என்று பேசவும் உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு என்று வாதிட்டார். முன்னால் இருந்தவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்பதற்காக அப்படி ஒரு நடைமுறை இல்லை என்று அர்த்தம் இல்லை. விதிகளில் இடமுண்டு, நீங்களும் பேசலாம் என்று கூறி அவரை அமர வைத்தார்.
தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் , மற்றும் விசிக எம்எல்ஏக்ககள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசை ஏன் ஆதரிக்கிறோம். முதல்வர் விஜய்யை ஏன் ஆதரிக்கிறோம் என்று பேசினார்கள். வரிசையாக கூட்டணி கட்சிகள் பேசிய பிறகு மற்ற கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் தனிப்பெரும் கட்சி என்ற பெயரை பெற்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்பட்டது. அதாவது 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில் ஐந்து முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். ஆனால் ஒவ்வொரு முறையும் போதிய பெரும்பான்மை எம்எல்ஏக்கள் உங்களிடம் இல்லை என்று திருப்பி அனுப்பினார்.
இறுதியாக பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஆளுநர் மாளிக்கைக்கு அழைத்து சென்று ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் மனு அளித்தார் விஜய். ஆனால் ஆளுநர் அர்லேகரோ நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய பின்னர், ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (மே 11) 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரில், சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் சிவி சண்முகம், வேலுமணி,லீமா ரோஸ், விஜயபாஸ்கர் உள்பட கணிசமான எம்எல்ஏக்கள் விஜய்யை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். எனவே பெரும்பான்மைக்கு விஜய்க்கு சிக்கல்வராது. அதிமுகவின் ஒரு பிரிவினர் விஜய்யை ஆதரிப்பதுடன், அமைச்சரவையிலும் இடம் பெறுகிறார்கள். விசிகவும் அமைச்சரவையில் இடம் பெற உள்ளது.














Click it and Unblock the Notifications